ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி காங்கிரஸ் கட்சியினர் அமைதி ஊர்வலம்


ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி காங்கிரஸ் கட்சியினர் அமைதி ஊர்வலம்
x
தினத்தந்தி 21 May 2019 10:45 PM GMT (Updated: 21 May 2019 8:08 PM GMT)

ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி காங்கிரஸ் கட்சியினர் அமைதி ஊர்வலம் நடத்தினர்.

திருச்சி,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாசலம் மன்றத்தில் இருந்து நேற்று மாலை அமைதி ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்துக்கு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தலைமை தாங்கினார். அமைதி ஊர்வலத்தின் முன்பகுதியில் சென்ற ஒரு வாகனத்தில் ராஜீவ் காந்தி உருவ படத்தை வைத்து இருந்தனர். ஊர்வலம் காந்திசிலை, மேலப்புலிவார்டு சாலை, காமராஜர் வளைவு வழியாக மரக்கடை பாஸ்போர்ட் அலுவலகம் அருகில் வந்ததும் அங்கு பயங்கரவாத எதிர்ப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.

ப.சிதம்பரம் உறுதிமொழியை வாசிக்க அதனை ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் திரும்ப படித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். ஊர்வலத்தில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜவகர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஜோசப் லூயிஸ், முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஆர்.சி.பாபு, சரவணன், முன்னாள் மேயர் சுஜாதா, மாவட்ட பொருளாளர் ராஜாநசீர், வடக்கு மாவட்ட பொருளாளர் நல்லசேகர் உள்பட காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

கருப்பு பட்டை அணிந்து...

இதேபோல் திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் கலை தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலமானது கொள்ளிடம் நெ.1 டோல்கேட் ரவுண்டானா அருகில் தொடங்கி உத்தமர்கோவில், வி.என்.நகர், மாருதி நகர் உள்ளிட்ட முக்கிய பகுதி வழியாக சென்று லால்குடி செல்லும் சாலை அருகில் முடிவடைந்தது. சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் விஜய்இளஞ்செழியன் மற்றும் நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு உடையில் கருப்பு பட்டை அணிந்தும், பதாகைகள் ஏந்தியவாறும் ஊர்வலமாக சென்றனர். முடிவில் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். 

Next Story