ஆரணி அருகே அரிசி வாங்கிய பணத்தை கேட்டதால் 2 பேர் மீது மணல் கடத்தல் புகார் - கிராம மக்கள் போராட்டம்


ஆரணி அருகே அரிசி வாங்கிய பணத்தை கேட்டதால் 2 பேர் மீது மணல் கடத்தல் புகார் - கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 21 May 2019 10:45 PM GMT (Updated: 21 May 2019 9:59 PM GMT)

அரிசி வாங்கிய பணத்தை கேட்டதால் 2 பேர் மீது மணல் கடத்தியதாக பொய்யான புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தை கிராம பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆரணி,

ஆரணியை அடுத்த சம்புவராயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 38). நெசவுத் தொழிலாளி ஆவார். மணல் கடத்தல் பிரச்சினை குறித்து கடந்த 2 தினங்களுக்கு முன்பு தச்சரம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்களுக்கும் இவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தான் கத்தியால் வெட்டப்பட்டதாக கூறி முருகேசன், ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். அப்போது மணல் கடத்தலை தட்டிக்கேட்டதால் தன்னை தச்சரம்பட்டு கிராமத்தை சேர்ந்த சிவா, சேட்டு ஆகியோர் வெட்டியதாக கூறியிருந்தார். அது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று காலை களம்பூர் போலீஸ் நிலையம் முன்பாக தச்சரம்பட்டு கிராமத்தை சேர்ந்த சிவா, சேட்டு ஆகியோரின் உறவினர்கள், கிராம பொதுமக்கள் திரண்டனர். சிவா, சேட்டு ஆகியோர் விவசாயிகள். அரிசி வியாபாரம் செய்து வரும் இவர்கள் மீது மணல் கடத்தியதாக முருகேசன் பொய்யான புகார் அளித்துள்ளார். எனவே முருகேசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி போலீஸ் நிலையத்தை அவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார், ஸ்ரீதேவி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முருகேசனையும், மணல் கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் சிவா, சேட்டு ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஆம்லெட் கடையில் தகராறு நடந்ததாகவும், தனக்குதானே கத்தியால் வெட்டிக் கொண்டு முருகேசன் மருத்துவமனைக்கு சென்றதாகவும் சிவா, சேட்டு ஆகியோர் கூறியுள்ளனர். மேலும் சேட்டுவின் உறவினர் சுதாகர், அரிசி வியாபாரம் செய்துவருகிறார். அவரிடம் அரிசி வாங்கிவிட்டு முருகேசன் பணம் தரவில்லை. அது குறித்து அவரிடம் சிவா, சேட்டு ஆகியோர் கேட்டபோது வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. எனவே 2 பேரையும் போலீசில் சிக்க வைப்பதற்காக இவ்வாறு மணல் கடத்தியதாக பொய்புகாரை முருகேசன் அளித்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி 3 பேரிடமும் கிராம மக்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி வழக்கு பதிவு செய்யாமல் சமரசம் செய்து அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story