கருத்துக்கணிப்புகளை நம்பவேண்டாம்: பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வராது நாராயணசாமி உறுதி


கருத்துக்கணிப்புகளை நம்பவேண்டாம்: பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வராது நாராயணசாமி உறுதி
x
தினத்தந்தி 21 May 2019 11:30 PM GMT (Updated: 21 May 2019 10:16 PM GMT)

கருத்துக்கணிப்புகளை நம்பவேண்டாம், பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வராது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு நாளையொட்டி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அவரது உருவப்படத்துக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் நாராயணசாமி பேசியதாவது:-

நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் கருத்துக் கணிப்புகள் எப்போதும்போல் மக்களை குழப்பி வருகிறது. இதைப்பற்றி நாம் முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும். கடந்த 2004-ம் ஆண்டு இந்தியா ஒளிர்கிறது, வாஜ்பாய் மீண்டும் பிரதமராக வருவார் என்றார்கள். ஆனால் அந்த கருத்துக் கணிப்பு பொய்த்துப்போனது.

காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று மன்மோகன்சிங் பிரதமர் ஆனார். 2009-ம் ஆண்டு கருத்துக்கணிப்பில் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வரும் என்றார்கள். ஆனால் மீண்டும் மன்மோகன்சிங் பிரதமர் ஆனார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் நடந்த தேர்தல் தொடர்பாக கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டது. 57 கருத்துக் கணிப்புகள் எதிர்க்கட்சியே ஆட்சியை பிடிக்கும் என்றது. ஆனால் மீண்டும் ஆளுங்கட்சியே ஆட்சியை பிடித்துள்ளது.

கருத்துக் கணிப்புகளை மீறி புதுவையில் வைத்திலிங்கம் அமோக வெற்றிபெறுவார். புதுவை, காரைக்கால் மாகி, ஏனாம் என அனைத்து பிராந்தியங்களிலும் உள்ள தொகுதிகளில் நாம் முன்னணி பெறுவோம். தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதியில் நமது கூட்டணி கட்சியான தி.மு.க. வேட்பாளர் வெங்கடேசன் வெற்றிபெறுவார்.

நாடு முழுவதும் 91 கோடி பேர் ஓட்டு போட்டுள்ளனர். அதில் 6 லட்சம் பேர் சொல்வதை கேட்டு கருத்துக்கணிப்பு என்பதை நம்ப தயாரில்லை. இந்த கருத்துக்கணிப்புகளை அ.தி.மு.க.வும் ஏற்கவில்லை. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் நம்பவில்லை என்கிறார். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் உற்சாகத்தை குறைக்க கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன என்று பிரியங்கா கூறி உள்ளார்.

மோடி உச்சத்தில் இருந்த 2014-ம் ஆண்டே 270 இடங்களுக்கு மேல் பாரதீய ஜனதா கட்சியினால் வரமுடியவில்லை. அப்படியிருக்க இப்போது 300-க்கு மேல் இடம் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. இந்த கருத்துக் கணிப்புகளால் பங்கு சந்தைதான் ஏற்றம் கண்டுள்ளது. எந்த ஒரு காரணத்தை கொண்டும் பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வராது.

சரக்கு மற்றும் சேவை வரி, பண மதிப்பிழப்பு, வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் மோடி மேல் மக்கள் வெறுப்பில் உள்ளனர். வாக்குகளை எண்ணும்போது அது தெரியவரும். அதிகாரிகளை பயன்படுத்தி தில்லு முல்லுகளை செய்ய பாரதீய ஜனதா முயற்சிக்கும். இதில் அவர்களை யாரும் மிஞ்ச முடியாது. எனவே வெற்றி சான்றிதழை பெறும்வரை நாம் வாக்கு எண்ணும் இடத்திலேயே இருக்கவேண்டும். கருத்துக் கணிப்புகளை நாம் நம்பவேண்டியதில்லை. மத்தியில் ராகுல்காந்தி பிரதமர் ஆவது உறுதி. இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத் பேசியதாவது:- இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்தியவர் ராஜீவ்காந்தி. கம்ப்யூட்டர் கொண்டுவந்தபோது அதனை பாரதீய ஜனதா எதிர்த்தது. வேலைவாய்ப்புகள் பறிக்கப்படும் என்றனர். ஆனால் அதன்மூலம் பலருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்தன.

அதேபோல் 21 வயதுள்ளவர்களுக்கே ஓட்டுரிமை என்று இருந்ததை 18 வயதாக குறைத்தவர் ராஜீவ்காந்தி. காங்கிரஸ் கட்சிக்குள்ளாகவே இதற்கு எதிர்ப்பு இருந்தநிலையிலும் அதனை செயல்படுத்தினார். பஞ்சாயத்துராஜ் சட்டத்தையும் அவர்தான் கொண்டுவந்தார்.

புதுவை எம்.பி. தொகுதியில் வைத்திலிங்கம் அமோக வெற்றிபெறுவார். கருத்துக் கணிப்பு என்பது ஏமாற்று வேலை. மோடி பிரதமர் பதவியில் இருந்து தூக்கி எறியப்படுவார். இவ்வாறு சஞ்சய்தத் பேசினார்.

Next Story