மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது மக்கள் நீதி மய்யம் புகார்


மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது மக்கள் நீதி மய்யம் புகார்
x
தினத்தந்தி 21 May 2019 11:15 PM GMT (Updated: 21 May 2019 10:22 PM GMT)

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது மக்கள் நீதி மய்யம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யத்தின் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவரும், திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான ரா.அருள் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி எங்கள் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நாக்கை அறுக்க வேண்டும் என்று அச்சுறுத்தும் வகையில் பேசிய பேச்சை தொலைக்காட்சிகளின் வழியாகவும், சமூக வலை தளங்களின் வழியாகவும் பார்த்து அதிர்ச்சி அடைந்து மனஉளைச்சல் அடைந்தேன். அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அரசியல் செல்வாக்காலும், அதிகாரத்தாலும் கமல்ஹாசனின் உடலுக்கும், உயிருக்கும் தீங்கு ஏற்படுத்தி விடுவாரோ? என பயமாக உள்ளது. தமிழக காவல்துறை இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வன்முறையை தூண்டும் விதமாகவும், அரசியல் அமைப்புச்சட்டத்திற்கு எதிராகவும் பேசியுள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது உரிய நடவடிக்கை எடுத்திட கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

அவருடன் பொறுப்பாளர்கள் சுரேஷ்,நாகராஜ், ரஞ்சித், வெங்கடேசன் உள்பட பலர் உடன் சென்றனர்.

Next Story