புதுக்கோட்டை அருகே ரெயில்முன் பாய்ந்து கல்லூரி மாணவர் தற்கொலை


புதுக்கோட்டை அருகே ரெயில்முன் பாய்ந்து கல்லூரி மாணவர் தற்கொலை
x
தினத்தந்தி 24 May 2019 10:45 PM GMT (Updated: 24 May 2019 4:55 PM GMT)

புதுக்கோட்டை அருகே ரெயில்முன் பாய்ந்து பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை தெற்கு சந்தைப்பேட்டை நகராட்சி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முத்துமாணிக்கம். ஓய்வுபெற்ற நகராட்சி ஊழியரான இவரது மகன் கலைவாணன் (வயது 19). இவர் குண்டூரில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக் என்ஜினீயரிங் படித்து வந்தார்.

இவர் நேற்று காலையில் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி செல்லும் சாலையின் அருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில், ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார். இதைபார்த்த அந்த வழியாக சென்றவர்கள் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் திருச்சி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் திருச்சி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கலைவாணனின் உடலை கைப்பற்றி பிரேத பிரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் கலைவாணன் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் அவர் தற்கொலை செய்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story