கேளூர் சந்தையில் திருட்டு மாடுகளை விற்க முயன்ற வாலிபர் சிக்கினார்


கேளூர் சந்தையில் திருட்டு மாடுகளை விற்க முயன்ற வாலிபர் சிக்கினார்
x
தினத்தந்தி 25 May 2019 10:45 PM GMT (Updated: 25 May 2019 4:45 PM GMT)

கேளூர் சந்தையில் திருட்டு மாடுகளை விற்க முயன்ற வாலிபர் சிக்கினர். தப்பி ஓடிய அவரது உறவினரை போலீசார் தேடிவருகிறார்கள்.

கண்ணமங்கலம்,

திருவள்ளூர் மாவட்டம் ஆரண்வாயல் கிராமத்தை சேர்ந்தவர் முனிசாமி (வயது 63). இவரது 3 பசு மாடுகளை கடந்த 24-ந் தேதி நள்ளிரவில் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து அவர் செவ்வாய்ப்பேட்டை போலீசில் புகார் செய்திருந்தார். தொடர்ந்து முனிசாமி அவரது உறவினர்களுடன் நேற்று காலை திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அருகே கேளூர் சந்தைமேடு பகுதியில் நடைபெறும் மாட்டு சந்தையில் தனது பசு மாடுகளை யாரேனும் விற்க வந்துள்ளனரா? என்று பார்த்தனர்.

அப்போது முனிசாமியின் பசு மாடுகள் அங்கிருப்பதை பார்த்து அதை விற்க வந்த ஆரண்வாயல் கிராமத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி (20), அவரது மாமா முரளி (40) ஆகியோரை பிடிக்க முயன்றனர். இதில் முரளி தப்பி ஓடிவிட்டார். சத்தியமூர்த்தி மட்டும் சிக்கினார்.

பின்னர் முனுசாமி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சத்தியமூர்த்தியை சந்தவாசல் போலீசில் ஒப்படைத்தனர். இதனையடுத்து பிடிபட்ட சத்தியமூர்த்தியை செவ்வாய்பேட்டை தலைமை காவலர் கருணைவேலிடம், சந்தவாசல் போலீசார் ஒப்படைத்தனர். அவர்கள் விசாரணை நடத்தி தப்பி ஓடிய முரளியை தேடி வருகிறார்கள்.

Next Story