துறையூர் அருகே விபத்தை ஏற்படுத்திய வாலிபர் மர்ம சாவு தாக்கப்பட்டதில் இறந்தாரா? போலீசார் விசாரணை


துறையூர் அருகே விபத்தை ஏற்படுத்திய வாலிபர் மர்ம சாவு தாக்கப்பட்டதில் இறந்தாரா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 25 May 2019 11:00 PM GMT (Updated: 25 May 2019 6:38 PM GMT)

துறையூர் அருகே விபத்தை ஏற்படுத்திய வாலிபர் மர்மமான முறையில் வாழைத்தோட்டத்தில் இறந்து கிடந்தார். மேலும் அவர் தாக்கப்பட்டதில் இறந்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

துறையூர்,

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள எரகுடி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் கார்த்திக் (வயது 22), டிப்ளமோ படித்த இவர் நேற்று தனது நண்பர் ஹரி என்பவரின் காரை ஓட்டி பார்ப்பதற்காக வாங்கினார். பின்னர் அவர் அந்த காரை எரகுடி பாலம் அருகே ஓட்டிச்சென்ற போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த அதே பகுதியை சேர்ந்த சிதம்பரம் என்பவர் லேசான காயம் அடைந்தார்.

இதனால் பயந்து போன கார்த்திக் அந்த காரை அதே இடத்தில் நிறுத்திவிட்டு், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதை அறிந்த சிதம்பரத்தின் உறவினர்கள் சிலர் கார்த்திக்கை தேடி கண்டுபிடித்து கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. இதற்கிடையில் அங்கு வந்த கார்த்திக்கின் சகோதரர் பாலமுருகன் (25) அவரை மீட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு தாக்குதல் நடத்தியவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, சிதம்பரத்தின் மருத்துவ செலவுக்கு ரூ.10 ஆயிரம் தரும்படி கேட்டுள்ளனர். இதனையடுத்து கார்த்திக்கின் தந்தை சுப்பிரமணியும், அவருடைய சகோதரர் பாலமுருகனும் காயமடைந்த சிதம்பரத்திடம் ரூ.8 ஆயிரத்தை கொடுத்து பேச்சுவார்த்தையை முடித்து விட்டு வீடு திரும்பினர். இதற்கிடையில் கார்த்திக் நீண்டநேரமாக வீட்டுக்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் கார்த்திக்கை பல்வேறு இடங்களில் தேடினர்.

இந்த நிலையில் எரகுடி சுடுகாட்டுக்கு அருகே உள்ள வாழை தோட்டத்தில் கார்த்திக் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கார்த்திக்கின் தந்தை சுப்பிரமணி துறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கார்த்திக்கின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிதம்பரத்தின் உறவினர்கள் தாக்கியதால் கார்த்திக் இறந்தாரா? அல்லது தாக்குதலுக்கு உள்ளானதால் அவமானப்பட்டு அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகுதான் அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும். 

Next Story