சூளகிரி அருகே மனைவியின் தலையில் கல்லை போட்டு கொல்ல முயற்சி தொழிலாளி கைது


சூளகிரி அருகே மனைவியின் தலையில் கல்லை போட்டு கொல்ல முயற்சி தொழிலாளி கைது
x
தினத்தந்தி 25 May 2019 10:45 PM GMT (Updated: 25 May 2019 7:03 PM GMT)

சூளகிரி அருகே மனைவியின் தலையில் கல்லை போட்டு கொல்ல முயன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

சூளகிரி,

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சாமல்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் அகமது பாஷா (வயது49). தொழிலாளி. இவரது மனைவி கவுசியா(38). இவர்களுக்கு 3 மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனர். இதனிடையே, கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் கணவன், மனைவி இருவரும் உறங்க சென்றனர்.

நேற்று அதிகாலை அகமது பாஷா, ஒரு கல்லை எடுத்து வந்து தூங்கி கொண்டிருந்த மனைவி கவுசியாவின் தலையில் போட்டார். இதில் படுகாயம் அடைந்த கவுசியா அலறி துடித்தார். மேலும் வீட்டில் இருந்த மகன்கள் மற்றும் மகள் ஆகியோரும் சத்தம் போட்டனர். அவர்களது சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர்.

இதுகுறித்து சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த கவுசியாவை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியிலும், பின்னர் அங்கிருந்து சேலம் அரசு ஆஸ்பத்திரியிலும் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அகமது பாஷாவை கைது செய்தனர்.

Next Story