விபத்தை ஏற்படுத்திய வாலிபரை கொடூரமாக தாக்கி கொன்ற 5 பேர் கைது


விபத்தை ஏற்படுத்திய வாலிபரை கொடூரமாக தாக்கி கொன்ற 5 பேர் கைது
x
தினத்தந்தி 26 May 2019 10:15 PM GMT (Updated: 26 May 2019 8:42 PM GMT)

துறையூர் அருகே விபத்தை ஏற்படுத்திய வாலிபரை கொடூரமாக தாக்கி கொன்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர். சமாதான பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

துறையூர்,

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள எரகுடி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் கார்த்திக் (வயது 22), டிப்ளமோ படித்த இவர் நேற்று முன்தினம் தனது நண்பர் ஹரி என்பவரின் காரை ஓட்டி பார்ப்பதற்காக வாங்கினார். பின்னர் அவர் அந்த காரை எரகுடி பாலம் அருகே ஓட்டிச்சென்ற போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த அதே பகுதியை சேர்ந்த சிதம்பரம் என்பவர் லேசான காயம் அடைந்தார்.

இதனால் பயந்து போன கார்த்திக் அந்த காரை அதே இடத்தில் நிறுத்திவிட்டு், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதை அறிந்த சிதம்பரத்தின் உறவினர்கள் சிலர் கார்த்திக்கை தேடி கண்டுபிடித்து கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. இதற்கிடையில் அங்கு வந்த கார்த்திக்கின் சகோதரர் பாலமுருகன் (25) அவரை மீட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு தாக்குதல் நடத்தியவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.

மீண்டும் தாக்குதல்

அப்போது, சிதம்பரத்தின் மருத்துவ செலவுக்கு ரூ.10 ஆயிரம் தரும்படி கேட்டுள்ளனர். இதனையடுத்து கார்த்திக்கின் தந்தை சுப்பிரமணியும், அவருடைய சகோதரர் பாலமுருகனும் காயமடைந்த சிதம்பரத்திடம் ரூ.8 ஆயிரத்தை கொடுத்து பேச்சுவார்த்தையை முடித்து விட்டு வீடு திரும்பினர். இதற்கிடையில் கார்த்திக் நீண்டநேரமாக வீட்டுக்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் கார்த்திக்கை பல்வேறு இடங்களில் தேடினர்.

இந்த நிலையில் எரகுடி சுடுகாட்டுக்கு அருகே உள்ள வாழை தோட்டத்தில் கார்த்திக் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கார்த்திக்கின் தந்தை சுப்பிரமணி துறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. தாக்குதலுக்கு ஆளான கார்த்திக் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை மீண்டும் சிலர் வழிமறித்து கட்டையால் கொடூரமாக தாக்கியுள்ளனர். படுகாயம் அடைந்த அவரை வாழை தோட்டத்துக்குள் வீசி சென்றனர்.

5 பேர் கைது

இதில் அவர் அங்கேயே துடி, துடித்து பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து போலீசார் நேற்று இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றினர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக சிதம்பரத்தின் உறவினர்களான சரவணன் (37), மூர்த்தி (48), மனோகரன் (43) மற்றும் பாலாஜி (56), அரிதாஸ் (40) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சிலரை போலீசார் தேடி வருகின்றனர். 

Next Story