மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதி 2 பேர் பலி


மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதி 2 பேர் பலி
x
தினத்தந்தி 27 May 2019 10:30 PM GMT (Updated: 27 May 2019 11:17 AM GMT)

வாணியம்பாடி அருகே மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.

வாணியம்பாடி, 

வாணியம்பாடி கோவிந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 46). இவர் வாணியம்பாடி பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் வாகன டிரைவராக பணியாற்றி வந்தார். அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் பார்த்திபன் (52). வேலாயுதம் தனது மகளை ஆம்பூர் அருகே உள்ள வடச்சேரியை சேர்ந்த வாலிபருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். மகள் வீட்டில் குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

அது குறித்து சமரசம் பேசுவதற்காக வேலாயுதம் தனது நண்பர் பார்த்திபனை அழைத்துக்கொண்டு மோட்டார்சைக்கிளில் வடச்சேரி கிராமத்திற்கு சென்றார். அங்கு மகள் வீட்டில் சமரசம் ஏற்படுத்திவிட்டு இருவரும் அதே மோட்டார்சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு திரும்பிக்கொண்டிருந்தனர்.

அந்த ஊரிலிருந்து வாணியம்பாடிக்கு வரும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இந்த நிலையில் மோட்டார்சைக்கிள் திடீரென ஒரு பள்ளத்தில் ஏறி இறங்கியபோது வேலாயுதத்தின் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய நிலையில் சாலையோரம் இருந்த தென்னை மரத்தின் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் இருவரையும் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி வேலாயுதம் இறந்து விட்டார்.

பார்த்திபனது உடல்நிலையும் ஆபத்தான நிலையில் இருந்ததால் அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரும் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இது குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story