பறக்கை அருகே கடன் தொல்லையால் வியாபாரி தற்கொலை


பறக்கை அருகே கடன் தொல்லையால் வியாபாரி தற்கொலை
x
தினத்தந்தி 27 May 2019 11:15 PM GMT (Updated: 27 May 2019 2:59 PM GMT)

பறக்கை அருகே கடன்தொல்லையால் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மேலகிருஷ்ணன்புதூர்,

பறக்கை அருகே வடக்கு செட்டித்தெருவை சேர்ந்தவர் பகவதி பெருமாள் (வயது 48). இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். பகவதி பெருமாள் பறக்கை மாமூடு சந்திப்பில் பலசரக்கு கடை நடத்தி வந்தார். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதற்காக பலரிடம் இருந்து பணம் கடன் வாங்கினார்.

ஆனால், போதிய வருமானம் இல்லாததால் வாங்கிய கடனை திரும்ப கொடுக்க முடியவில்லை. இதற்கிடையே பணத்தை கொடுத்தவர்கள் திரும்ப கேட்டு தொல்லை கொடுத்து வந்தனர். இதனால், கடந்த சில நாட்களாக பகவதி பெருமாள் மனமுடைந்து காணப்பட்டார்.

நேற்று முன்தினம் இரவு உணவு சாப்பிட்ட பின்பு வழக்கம் போல் தூங்க சென்றார். நேற்று காலையில் மனைவி சுப்புலட்சுமி கண் விழித்த போது, பகவதி பெருமாள் மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடன் தொல்லையால் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த சுசீந்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  

மேலும் இதுதொடர்பாக சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடன் தொல்லையால் வியாபாரி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story