வில்லேபார்லேயில் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை


வில்லேபார்லேயில் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
x
தினத்தந்தி 27 May 2019 10:45 PM GMT (Updated: 27 May 2019 9:37 PM GMT)

வில்லேபார்லேயில் மாநில பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மும்பை,

வாசிம் மாவட்டத்தை சேர்ந்தவர் மோகன் எக்னார்(வயது28). மாநில பாதுகாப்பு படை வீரராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று மாலை இவர் மும்பை வில்லேபார்லே ஏர்போர்ட் காலனியில் பணியில் இருந்தார்.

அப்போது, திடீரென அவர் தனது சர்வீஸ் துப்பாக்கியை எடுத்து வாயில் வைத்து சுட்டுக்கொண்டார். இதில், படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற பாதுகாப்பு படை வீரர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக அவர் எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் சிக்கியது. அதில், தனது இந்த முடிவுக்கு 3 பேர் காரணம் என அவர் எழுதி வைத்திருந்தார்.

விசாரணையில், திருமணமான தனது முன்னாள் காதலியை வாசிமில் பின்தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்தது தொடர்பாக அங்குள்ள போலீஸ் நிலையத்தில் மோகன் எக்னார் மீது வழக்குப்பதிவு செய்திருந்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது தற்கொலைக்கான காரணத்தை கண்டறிய தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story