மூங்கில்துறைப்பட்டு அருகே, இளம்பெண் தீக்குளித்து தற்கொலை - குடும்ப தகராறில் விபரீத முடிவு


மூங்கில்துறைப்பட்டு அருகே, இளம்பெண் தீக்குளித்து தற்கொலை - குடும்ப தகராறில் விபரீத முடிவு
x
தினத்தந்தி 27 May 2019 10:15 PM GMT (Updated: 27 May 2019 11:04 PM GMT)

மூங்கில்துறைப்பட்டு அருகே குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

மூங்கில்துறைப்பட்டு, 

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி சரோஜா (வயது 23). இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. தற்போது ஒரு குழந்தை உள்ளது. மணிகண்டனும், சரோஜாவும் அதே பகுதியில் உள்ள ஒரு கல்குவாரியில் வேலை பார்த்து வந்தனர். கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று மணிகண்டனுக்கும், சரோஜாவுக்கும் இடையே மீண்டும் குடும்ப தகராறு ஏற்பட்டது.

இதனால் மனமுடைந்த சரோஜா வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் முழுவதும் தீ பரவி எரிந்ததில் வலியால் அலறி துடித்தார். இந்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் சரோஜாவை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி சரோஜா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சரோஜாவுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் அவரது தற்கொலை குறித்து கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் ஸ்ரீகாந்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Next Story