மழைக்கு ஒதுங்கிய போது பரிதாபம், மின்னல் தாக்கி பெண் பலி, பக்கத்தில் நின்ற தொழிலாளி அதிர்ச்சியில் மயக்கம்


மழைக்கு ஒதுங்கிய போது பரிதாபம், மின்னல் தாக்கி பெண் பலி, பக்கத்தில் நின்ற தொழிலாளி அதிர்ச்சியில் மயக்கம்
x
தினத்தந்தி 27 May 2019 10:45 PM GMT (Updated: 27 May 2019 11:05 PM GMT)

மழைக்கு ஒதுங்கிய போது, மின்னல் தாக்கியதில் பெண் தொழிலாளி ஒருவர் பலியானார். அவருக்கு அருகில் நின்ற மற்றொரு பெண் தொழிலாளி அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார்.

கூடலூர்,

கூடலூர் 5-வது வார்டை சேர்ந்தவர் ஜெயராமன். தச்சுத்தொழிலாளி. அவருடைய மனைவி ஜெயப்பிரியா (வயது 40). இவர் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று ஜெயப்பிரியா, பக்கத்து வீட்டை சேர்ந்த சித்ரா மற்றும் 25 பேர் கூடலூர் வெட்டுக்காடு பகுதியில், செல்வேந்திரன் என்பவருக்கு சொந்தமான வாழைத்தோட்டத்தில் வேலை செய்தனர். மதியம் 3 மணி அளவில் அப்பகுதியில் திடீரென பலத்த மழை பெய்தது. இதையடுத்து மழையில் நனையாமல் இருப்பதற்காக ஜெயப்பிரியாவும், சித்ராவும் தோட்டத்தைவிட்டு வெளியேறினர். பின்னர் சாலையோர புளியமரத்தின் அடியில் ஒதுங்கி நின்றுகொண்டிருந்தனர்.

அப்போது திடீரென ஜெயப்பிரியா மீது மின்னல் தாக்கியது. இதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

இதைப்பார்த்த சித்ரா அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார்.

இதற்கிடையே அங்கு வந்த சக தொழிலாளர்கள் ஜெயப்பிரியா மின்னல் தாக்கி இறந்து கிடப்பதையும், அவர் அருகில் சித்ரா மயக்க நிலையில் கிடப்பதையும் பார்த்தனர். உடனே சித்ராவை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் லோயர்கேம்ப் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காளிமுத்து தலைமையிலான போலீசார் விரைந்து வந்து ஜெயப்பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story