அனகாபுத்தூரில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


அனகாபுத்தூரில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 28 May 2019 10:15 PM GMT (Updated: 28 May 2019 5:03 PM GMT)

அனகாபுத்தூரில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தாம்பரம்,

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் நகராட்சி பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னை குடிநீர் வாரியம் வழங்கும் தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ள நிலையில், தமிழ்நாடு குடிநீர் வாரியமும் குறைந்த அளவு குடிநீரையே வினியோகம் செய்கிறது.

இதனால் நகராட்சி பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் அதுவும் போதுமானதாக இல்லை. இதனால் அவ்வப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் அனகாபுத்தூர் தியாகராஜ முதலி தெருவில் கடந்த 30 நாட்களுக்கு மேலாக குடிநீர் குழாய்களில் தண்ணீர் வினியோகிக்கப்படுவதில்லை எனவும், அப்படியே ஒருசில நாட்களில் தண்ணீர் வந்தாலும் கலங்கலாக வருவதுடன், புழுக்களும் வருவதால் அதை குடிக்க முடியவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட திரளான பொதுமக்கள் குடிநீர் கேட்டு நேற்று குன்றத்தூர்-பல்லாவரம் சாலையில் அனகாபுத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலையை மறித்து காலி குடங்களை வரிசையாக அடுக்கி வைத்து தடுப்பு ஏற்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த சங்கர் நகர் போலீசார் மற்றும் அனகாபுத்தூர் நகராட்சி அதிகாரிகள், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை சமரசம் செய்து கலைந்து போக செய்தனர். பின்னர் லாரி மூலம் அந்த பகுதி மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் சுமார் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story