சின்னாளபட்டியில் பயங்கரம், தலையில் அம்மிக்கல்லை போட்டு மகளை கொன்ற தாய்


சின்னாளபட்டியில் பயங்கரம், தலையில் அம்மிக்கல்லை போட்டு மகளை கொன்ற தாய்
x
தினத்தந்தி 28 May 2019 10:15 PM GMT (Updated: 28 May 2019 5:42 PM GMT)

சின்னாளபட்டியில் தலையில் அம்மிக்கல்லை போட்டு மகளை கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர்.

சின்னாளபட்டி,

திருப்பூரை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி மணிமேகலை (வயது 30). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜசேகர் இறந்து விட்டார். இதையடுத்து மணிமேகலை தனது 3 குழந்தைகளுடன், திருப்பூரில் உள்ள தனது தாயார் வீட்டில் தங்கியிருந்து பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்தார்.

மணிமேகலையின் பெரியம்மா லட்சுமி, திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளபட்டி கருணாநிதி காலனியில் வசித்து வருகிறார். தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் 3 குழந்தைகளையும் அழைத்து கொண்டு மணிமேகலை சின்னாளபட்டி கருணாநிதி காலனியில் உள்ள பெரியம்மா வீட்டுக்கு வந்தார்.

நேற்று முன்தினம் இரவு அனைவரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 3 மணியளவில் எழுந்த மணிமேகலை தனது 2-வது மகள் யாழினி (9)யை தூக்கி கொஞ்சியுள்ளார். பின்னர் திடீரென அவளை கீழே தள்ளி விட்டார். இதனால் யாழினி அலறி துடித்தார். மேலும் அருகில் கிடந்த அம்மிக்கல்லை எடுத்து பெற்ற மகள் என்று கூட பாராமல் தலையில் போட்டார்.

இதில் தலை சிதைந்து சம்பவ இடத்திலேயே யாழினி பரிதாபமாக இறந்தாள். சத்தம் கேட்டு தூங்கி கொண்டிருந்த மணிமேகலையின் பெரியம்மா லட்சுமி மற்றும் அவருடைய கணவர் எழுந்து பார்த்தபோது யாழினி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து சின்னாளபட்டி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மணிமேகலைக்கு மனநலம் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர், மகளை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இருப்பினும் உண்மையான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிமேகலையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற மகளையே தாய் கொலை செய்த சம்பவம் சின்னாளபட்டி பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story