திருப்பத்தூர் அருகே, மனைவியை கொலை செய்துவிட்டு தொழிலாளி தற்கொலை


திருப்பத்தூர் அருகே, மனைவியை கொலை செய்துவிட்டு தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 28 May 2019 11:00 PM GMT (Updated: 28 May 2019 9:05 PM GMT)

திருப்பத்தூர் அருகே குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்துவிட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே உள்ள குரிசிலாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 32), மேளம் அடிக்கும் தொழிலாளி. இவரது மனைவி சின்ன பாப்பா (26). இவர்களுக்கு பாரதிலட்சுமி (8) என்ற மகளும், தமிழ் (3) என்ற மகனும் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படுவது வழக்கம்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் கணவனுடன் கோபித்து கொண்டு, ஆந்திர மாநிலம் குப்பம் அருகே நூலகுண்டாவில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சின்னபாப்பா சென்று விட்டார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்கு சென்ற முருகன், மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரை சமாதானம் செய்து, சேர்ந்து வாழலாம் என சின்னபாப்பாவை தனது வீட்டிற்கு அழைத்து வந்தார்.

இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் நேற்று காலை தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முருகன் கத்தியால் மனைவியின் கழுத்து உள்பட உடலில் ஆங்காங்கே சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த சின்னபாப்பா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

அதனை தாங்கி கொள்ள முடியாத முருகனும் அதே அறையில் மனைவியின் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குரிசிலாப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story