வரத்து குறைவு காரணமாக ஊட்டியில் தக்காளி விலை உயர்வு - கிலோ ரூ.60-க்கு விற்பனை


வரத்து குறைவு காரணமாக ஊட்டியில் தக்காளி விலை உயர்வு - கிலோ ரூ.60-க்கு விற்பனை
x
தினத்தந்தி 29 May 2019 10:15 PM GMT (Updated: 29 May 2019 7:26 PM GMT)

வரத்து குறைவு காரணமாக ஊட்டியில் தக்காளி விலை உயர்ந்து உள்ளது. ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனை ஆகிறது.

ஊட்டி,

மலை மாவட்டமான நீலகிரியில் கேரட், பீட்ரூட், பீன்ஸ், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், பட்டாணி, காலிபிளவர் போன்ற காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகின்றன. மலைப்பிரதேசத்தில் இந்த காய்கறிகள் நல்ல விளைச்சலை தருவதால், அதனை விவசாயிகள் பயிரிட்டு வருகிறார்கள். விவசாயிகள் தங்களது நிலத்தில் பயிரிடும் மலைக்காய்கறிகளை அறுவடை செய்து ஊட்டி நகராட்சி மார்க்கெட், மேட்டுப்பாளையம் மார்க்கெட் மற்றும் வெளியிடங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் விளையும் காய்கறிகள் எளிதில் பொதுமக்களுக்கு கிடைக்கும். கத்தரிக்காய், தக்காளி, புடலங்காய், வெண்டைக்காய், சுரைக்காய், பூசணிக்காய், முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகள், வாழைக்காய், முருங்கை கீரை, தேங்காய், கறிவேப்பிலை போன்றவை வெளியிடங்களில் இருந்து தினமும் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இந்த காய்கறிகள் சமையலுக்கு இன்றியமையாததாக உள்ளது. ஊட்டி நகர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்தவர்கள் தங்களது வீட்டிற்கு தேவையான காய்கறிகளை நகருக்கு வந்து வாங்கி செல்கிறார்கள்.

ஊட்டிக்கு தக்காளி வரத்து குறைந்து உள்ளதால், ஊட்டி நகராட்சி மார்க்கெட் கடைகளில் விற்பனை செய்யப்படும் தக்காளி விலை உயர்ந்துகொண்டே செல்கிறது. கடந்த வாரம் தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து வரத்து குறைவாக காணப்படுவதால், நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை ஆனது.

ஊட்டியில் கிடு, கிடு என தக்காளி விலை உயர்ந்து உள்ளதால், கடைகளில் தக்காளி வாங்கும் அளவை பெண்கள் குறைத்து உள்ளனர். மேலும் தொடர்ச்சியாக ஏறுமுகமாக இருப்பதால் பொதுமக்கள் அவதி அடைந்து இருக்கின்றனர். இதுகுறித்து கடை வியாபாரி குமார் கூறியதாவது:-

கர்நாடகா மாநிலம் குண்டல்பெட், நஞ்சன்கோடு மற்றும் வெளியிடங்களில் இருந்து தக்காளி சரக்கு வாகனங்களில் ஊட்டிக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தற்போது சமவெளிப்பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைப்பதால், போதிய தண்ணீர் இல்லாமல் தக்காளி அதிகமாக விளைச்சல் இல்லை. இதனால் தக்காளி வரத்து வெகுவாக குறைந்து இருக்கிறது. அதன் காரணமாக ஊட்டியில் தக்காளி விலை உயர்ந்து உள்ளது

கடந்த சில தினங்களுக்கு முன்பு கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்ட பீன்ஸ் விலை குறைந்து, தற்போது ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. உருளைக்கிழங்கு ஒரு கிலோ ரூ.35 முதல் ரூ.40, கேரட் ரூ.45, பட்டாணி ரூ.150 முதல் ரூ.250, முள்ளங்கி ரூ.15 முதல் ரூ.20, பீட்ரூட் ரூ.30 முதல் ரூ.40, காலிபிளவர் ரூ.40, சின்ன வெங்காயம் ரூ.60, பெரிய வெங்காயம் ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை ஆகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story