தண்டையார்பேட்டையில் ஆட்டோ டிரைவர் கழுத்தை அறுத்து கொலை


தண்டையார்பேட்டையில் ஆட்டோ டிரைவர் கழுத்தை அறுத்து கொலை
x
தினத்தந்தி 29 May 2019 10:30 PM GMT (Updated: 29 May 2019 10:47 PM GMT)

தண்டையார்பேட்டையில், ஆட்டோ டிரைவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் அவரது உடலை சாக்குப்பையில் கட்டி முட்புதரில் வீசி சென்று உள்ளனர்.

பெரம்பூர், 

சென்னை தண்டையார்பேட்டை எண்ணூர் நெடுஞ்சாலையில் ஐ.ஓ.சி. டீசல் செட் அருகே உள்ள முட்புதரில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக நேற்று மாலை ஆர்.கே.நகர் போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர்.

அதில், சாக்குப்பையின் உள்ளே வாலிபர் பிணமாக கிடந்தார். அவரது கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது. தலையிலும் பலத்த வெட்டுக்காயம் காணப்பட்டது.

எனவே கொலையாளிகள் அவரை வேறு எங்கோ வைத்து கழுத்தை அறுத்தும், தலையில் வெட்டியும் கொடூரமாக கொலை செய்துவிட்டு, உடலை சாக்குப்பைக்குள் வைத்து கட்டி, முட்புதரில் வீசி சென்று இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

பிணமாக கிடந்த வாலிபரின் சட்டைப்பையில் போலீசார் சோதனை செய்தபோது, அடையாள அட்டை இருந்தது. அதில் அவர், தண்டையார்பேட்டை பட்டேல் நகர் 3-வது தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மூர்த்தி (வயது 28) என்பது தெரிந்தது.

மூர்த்திக்கு திருமணமாகி கவுசல்யா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். அவர் மீது ஆர்.கே.நகர் போலீசில் அடிதடி வழக்கு இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து மூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மூர்த்தியை கொலை செய்தவர்கள் யார்?, எதற்காக அவரை கொலை செய்தனர்? என விசாரித்து வருகின்றனர். மேலும் போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

Next Story