கள்ளூரில் ஜல்லிக்கட்டு; வீரர்கள், காளைகளுக்கு பரிசு


கள்ளூரில் ஜல்லிக்கட்டு; வீரர்கள், காளைகளுக்கு பரிசு
x
தினத்தந்தி 30 May 2019 10:45 PM GMT (Updated: 30 May 2019 7:53 PM GMT)

கள்ளூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் வீரர்கள், காளைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், வெற்றியூர் ஊராட்சிக்கு உட்பட்ட கள்ளூர் கிராமத்தில் நேற்று ஊரின் நடுவே உள்ள தெருவில் வாடிவாசல் மற்றும் தடுப்புகள் அமைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, நாமக்கல், புதுக்கோட்டை, மதுரை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்துவரப்பட்ட 538 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட மாடுபிடி வீரர்களும், காளைகளும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர். 250 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறி வந்த காளைகளை அடக்க முயன்றனர். இதில் பல காளைகள் மாடுபிடி வீரர்களால் அடக்கப்பட்டன. சில காளைகள் வீரர்களை அருகில் கூட நெருங்க விடாமல் ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்தன.

10 பேர் காயம்

தொடர்ந்து ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், நாற்காலி, மின்விசிறி, பாத்திரங்கள், ரொக்கப்பரிசு உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டது. மேலும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு பொன்னாடை போர்த்தி, கேடயங்கள் பரிசாக வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். இதில் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) பொற்கொடி, கோட்டாட்சியர் பாலாஜி, தாசில்தார் கதிரவன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டை பார்வையிட்டனர். ஜல்லிக்கட்டுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில், 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 10 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அருகிலேயே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. காலை 9 மணி அளவில் தொடங்கப்பட்ட இந்த ஜல்லிக்கட்டு மதியம் 2 மணி அளவில் முடிவடைந்தது. 

Next Story