வடமதுரை அருகே பரிதாபம், கல்குவாரி குட்டையில் மூழ்கி மாணவன் பலி


வடமதுரை அருகே பரிதாபம், கல்குவாரி குட்டையில் மூழ்கி மாணவன் பலி
x
தினத்தந்தி 1 Jun 2019 10:30 PM GMT (Updated: 1 Jun 2019 7:14 PM GMT)

வடமதுரை அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.

வடமதுரை,

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள மோர்பட்டியை சேர்ந்தவர் ரஜினிகாந்த். அவருடைய மகன் ரகுநாத் (வயது 13). இவன், வடமதுரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் வீட்டில் இருந்து வந்தான்.

நேற்று இவன், அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் அருண்குமார் (17), பிரகாஷ் (13), இன்பு (15) ஆகியோருடன் ஆண்டிப்பட்டி கல்குளம் அருகே உள்ள கல்குவாரி குட்டையில் குளிக்க சென்றான். பின்னர் 4 பேரும் கல்குவாரி குட்டையில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது ரகுநாத் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

ஆனால் நீச்சல் தெரியாததால் ரகுநாத் தண்ணீரில் தத்தளித்தபடி கூச்சல் போட்டுள்ளான். உடன் சென்ற நண்பர்களுக்கும் நீச்சல் தெரியாததால் அவனை காப்பாற்ற முடியாமல் திகைத்து போய் நின்றனர். இதையடுத்து அவர்கள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் சென்று தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் ரகுநாத் நீரில் மூழ்கினான்.

இதுகுறித்து வேடசந்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து நீரில் மூழ்கிய ரகுநாத்தை பிணமாக மீட்டனர். ரகுநாத்தின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதற்கிடையே தகவல் அறிந்த வடமதுரை போலீசார் ரகுநாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story