தஞ்சை ராசாமிராசுதார் அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான இருதய நோய் கண்டறிதல் முகாம்


தஞ்சை ராசாமிராசுதார் அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான இருதய நோய் கண்டறிதல் முகாம்
x
தினத்தந்தி 1 Jun 2019 10:45 PM GMT (Updated: 1 Jun 2019 7:15 PM GMT)

தஞ்சை ராசாமிராசுதார் அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான இருதய நோய் கண்டறிதல் முகாமை மருத்துவக்கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜ் தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர்,

தஞ்சை ராசாமிராசுதார் அரசு மருத்துவமனையில் மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவைகள் மையம் செயல்பட்டு வருகிறது. பிறந்த குழந்தைகள் முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு பிறவி குறைபாடுகள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மையமானது கோவை ஜி.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை மற்றும் ஏகம் அறக்கட்டளையுடன் இணைந்து குழந்தைகளுக்கான இருதய நோய் கண்டறிதல் மற்றும் அறுவை சிகிச்சை முகாமை நடத் தியது.

முகாமிற்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜ் தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர், குழந்தைகளுக்கு மூச்சு திணறல், அதிக சளி, தொடர்ந்து இருமல் இருந்தால் வேறு ஏதேனும் காரணமாக இருக்கும் என சாதாரணமாக இருந்துவிடக்கூடாது. இருதய நோயின் பாதிப்பாக கூட இருக்கலாம். எனவே இந்த மாதிரி அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால் குழந்தைகளுக்கு இருதய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

அறுவை சிகிச்சை செய்யப்படாமலேயே சிகிச்சை அளிக்க முடியும். மறுநாளே குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து செல்ல முடியும். எனவே எதற்கும் பயப்படாமல் குழந்தைகளுக்கு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார்.

முகாமில் 140 குழந்தைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களில் 61 குழந்தைகள் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இருதய அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர். குழந்தைகள் இருதய சிகிச்சை நிபுணர் கல்யாணசுந்தரம், அறுவை சிகிச்சை நிபுணர் விஜயகுமார் ஆகியார் எக்கோ கருவி மூலம் குழந்தைகளுக்கு பரிசோதனை செய்தனர்.

இதில் நிலைய மருத்துவ அலுவலர் உஷாதேவி, துணை கண்காணிப்பாளர் குமரன், குழந்தைகள் நல துறை தலைவர் ராஜசேகர், பேராசிரியர் செல்வக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடக்கத்தில் டாக்டர் கிருத்திகா வரவேற்றார். முடிவில் டாக்டர் ஷாலினி நன்றி கூறினார்.

Next Story