கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் படையெடுப்பு; சாலையோரம் பலாப்பழம் விற்க தடை


கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் படையெடுப்பு; சாலையோரம் பலாப்பழம் விற்க தடை
x
தினத்தந்தி 2 Jun 2019 10:30 PM GMT (Updated: 2 Jun 2019 8:22 PM GMT)

கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் படையெடுக் கின்றன. இதை கட்டுப்படுத்த சாலையோரம் பலாப்பழம் விற்பனை செய்வதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

கூடலூர்,

கூடலூர், முதுமலை வனப்பகுதியில் காட்டு யானைகள், மான்கள், சிறுத்தைப்புலிகள், கரடிகள், புலிகள், காட்டெருமைகள் என வனவிலங்குகள் உள்ளன. கடந்த சில மாதங்களாக கடும் வறட்சி காணப்பட்டது. இதனால் வனத்தில் உள்ள புற்கள் கருகியதுடன், நீர்நிலைகள் வறண்டன. தொடர்ந்து வனவிலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடும் ஏற்பட்டது. இதனால் காட்டு யானைகள் உணவு, தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகிறது.

முதுமலை கரையோரம் உள்ள கூடலூர், ஸ்ரீமதுரை ஊராட்சி பகுதிக்குள் காட்டு யானைகள் நுழைந்து அட்டகாசம் செய்கிறது. இந்த நிலையில் கூடலூர் பகுதியில் மாலை அல்லது இரவில் பரவலாக மழையும் பெய்து வருவதால் வனம் பசுமைக்கு திரும்பி உள்ளது. இதனால் வனத்தை விட்டு காட்டு யானைகள் வெளியே வராது என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் காட்டு யானைகள் மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் படையெடுக்கின்றன. இந்த பகுதியில் தற்போது காட்டு யானைகளுக்கு மிகவும் பிடித்தமான பலாப்பழ சீசன் களை கட்டி உள்ளது. இதனால் பலாப்பழங்களை தேடி காட்டு யானைகள் ஊருக்குள் வருகின்றன. கூடலூர்- முதுமலை புலிகள் காப்பக நுழைவு வாயிலில் தொரப்பள்ளி பஜார் உள்ளது. இரவில் வனத்தில் இருந்து காட்டு யானைகள் வெளியேறி தொரப்பள்ளி பஜாருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வருகிறது.

இதேபோல் கோக்கால் மலைப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் மேல்கூடலூர், கெவிப்பாரா, ஹெல்த்கேம்ப் உள்ளிட்ட பகுதியில் உள்ள பலா மரங்களை தேடி தினமும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் இரவில் பீதியுடன் இருக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது.

கூடலூர் மார்த்தோமா நகர் தொடங்கி மாக்கமூலா, தொரப்பள்ளி வரை சாலையோரம் பலாப்பழங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளிடம் விற்கப்படுகிறது. பலாப்பழ கழிவுகள் திறந்தவெளி மற்றும் குப்பை தொட்டிகளில் வீசப்படுகிறது. இதனால் காட்டு யானைகள் பலாப்பழ வாசனையால் ஈர்க்கப்பட்டு ஊருக்குள் வருகிறது.

இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, சாலையோரம் பலாப்பழங்களை வைத்து விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தங்கள் பிழைப்புக்காக பழங்களை விற்பனை செய்வதாக வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த வி‌‌ஷயத்தில் எதுவும் செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும் பலாப்பழ கழிவுகளை திறந்த வெளியில் கொட்டக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது, என்றனர்.

Next Story