வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி குமாஸ்தா கைது


வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி குமாஸ்தா கைது
x
தினத்தந்தி 2 Jun 2019 10:45 PM GMT (Updated: 2 Jun 2019 10:38 PM GMT)

வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி குமாஸ்தாவை போலீசார் கைது செய்தனர்.

மும்பை, 

வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி குமாஸ்தாவை போலீசார் கைது செய்தனர்.

வேலை கேட்டு விண்ணப்பம்

மும்பை மாநகராட்சியில் ஊழியராக வேலை பார்த்து வந்தவர் அசோக் சவான்(வயது57). இவர் ஓய்வுபெற ஓராண்டு இருந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் உடல் நலம் சரியில்லாமல் உயிரிழந்தார். இதனால் அவரது மகன் தந்தை பார்த்த வேலையை கேட்டு மாநகராட்சியிடம் விண்ணப்பித்தார்.

இந்த மனுவை பரிசீலனை செய்த குமாஸ்தா சூரியகாந்த் ஜாதவ் (50) என்பவர் தனக்கு ரூ.40 ஆயிரம் லஞ்சம் தந்தால் அந்த மனுவை உயர் அதிகாரிகளிடம் கொடுத்து வேலைக்கு ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.

குமாஸ்தா கைது

இதைக்கேட்டு அசோக் சவானின் மகன் அதிர்ச்சி அடைந்தார். இருப்பினும் அவர் பணம் தர சம்மதித்து, முதற்கட்டமாக ரூ.15 ஆயிரம் தருவதாக தெரிவித்தார். பின்னர் லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் குமாஸ்தா சூரியகாந்த் ஜாதவை கையும், களவுமாக பிடிக்க திட்டமிட்டனர்.

இதற்காக புகார் கொடுத்தவரிடம் ரசாயன பொடி தடவிய ரூ.15 ஆயிரத்தை கொடுத்து அனுப்பினர். அதன்பேரில் அவர் மாநகராட்சி குமாஸ்தா சூரியகாந்த் ஜாதவை சந்தித்து பணத்தை கொடுத்தார்.

பணத்தை வாங்கி பையில் வைத்தபோது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story