திருவையாறு அருகே 20 கூரை வீடுகள் எரிந்து நாசம் ரூ.50 லட்சம் பொருட்கள் சேதம்


திருவையாறு அருகே 20 கூரை வீடுகள் எரிந்து நாசம் ரூ.50 லட்சம் பொருட்கள் சேதம்
x
தினத்தந்தி 3 Jun 2019 11:00 PM GMT (Updated: 3 Jun 2019 7:03 PM GMT)

திருவையாறு அருகே 20 கூரை வீடுகள் எரிந்து நாசமாயின. இதில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.

திருவையாறு,

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள சின்னகண்டியூரை சேர்ந்தவர் சுரேஷ். இவர் கூரை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று சுரேஷ் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று இருந்தார். இந்த நிலையில் அவருடைய வீட்டின் கூரை திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இந்த தீ மளமளவென அருகே உள்ள சந்தியா, கார்த்திகேயன், கலியபெருமாள், விஜயகுமார், ராஜேந்திரன், ஞானம்மாள், ஸ்ரீதர், ஹரினி, மகாலட்சுமி ஆகியோர் உள்பட 20 பேரின் கூரை வீடுகளுக்கும் பரவியது. ஒரே நேரத்தில் 20 கூரை வீடுகள் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தீ விபத்து குறித்த தகவலின்பேரில் திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, தஞ்சை ஆகிய 3 இடங்களில் இருந்து தீயணைப்பு படை வீரர்கள், தீயணைப்பு நிலைய அதிகாரிகள் பிரேம்குமார், செல்வராஜ், திலகர், சித்தார்த்தன் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

3 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் 20 கூரை வீடுகளும் எரிந்து நாசமாயின. வீடுகளில் இருந்த கட்டில், பீரோ, நாற்காலிகள், பாத்திரங்கள், நகைகள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. இதன் மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

முன்னதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் வீடுகளின் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த வினோத் என்பவர் தவறி கீழே விழுந்து காயம் அடைந்தார். அவருக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 20 பேரின் குடும்பத்தினருக்கும் தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், திருவையாறு தாசில்தார் இளம்மாருதி, நிலவள வங்கி தலைவர் இளங்கோவன், ஊராட்சி ஒன்றிய ஆணையர் சாமிநாதன் உள்ளிட்டோர் ஆறுதல் கூறி தலா ரூ.5 ஆயிரம் வீதம் நிவாரண உதவித்தொகையை வழங்கினர். அப்போது திருவையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரூபாவதி, ரவிச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

விபத்தில் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை இழந்தவர்களுக்கு புதிய ஆவணங்களை வழங்க மாவட்ட கலெக்டர், தாசில்தாருக்கு உத்தரவிட்டுள்ளார். மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி போலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story