குடிநீர் கேட்டு போராட்டம்: நெல்லை கலெக்டர் அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை


குடிநீர் கேட்டு போராட்டம்: நெல்லை கலெக்டர் அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை
x
தினத்தந்தி 3 Jun 2019 10:15 PM GMT (Updated: 3 Jun 2019 7:35 PM GMT)

சீராக குடிநீர் வழங்கக்கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டனர். மேலும் அவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை,

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வளர்ச்சிமன்ற கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

நெல்லையை அடுத்த குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஊர் பொதுமக்கள் சார்பில் கலெக்டர் ஷில்பாவிடம் மனு கொடுக்கப்பட்டது.

அந்த மனுவில், “எங்கள் ஊர் 6 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த வார்டுகளுக்குள் குடிநீர் தேக்கத்தொட்டிகள் உள்ளது. தொட்டிகள் இருந்தும் சரியாக குடிநீர் கிடைப்பது இல்லை. 8 அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குறைந்த அளவு தண்ணீர் தான் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே, சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், “எங்கள் ஊரில் தாமிரபரணி ஆற்று தண்ணீர் கிடைப்பது இல்லை. ஆழ்குழாய் கிணறு மூலம் பொது குழாய்களில் கிடைக்கும் தண்ணீரும் கிடைப்பது இல்லை. எங்கள் ஊரில் 24 குழாய்கள் இருக்கின்றன. ஒரு குழாயில்கூட தண்ணீர் வருவது இல்லை. தற்போது பள்ளிக்கூடம் திறந்து விட்டது. தண்ணீர் இல்லாமல் மாணவர்களும் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாணவர்களின் நலன் கருதி எங்கள் ஊரில் தண்ணீர் சீராக கிடைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்“ என்றனர். இந்த திடீர் சாலை மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தேவர்குளத்தை சேர்ந்த பெண்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், “எங்கள் பகுதியில் ஒரு குடிநீர் தேக்கத்தொட்டி உள்ளது. அந்த தொட்டியில் இருந்து வேறு பகுதிக்கு தண்ணீர் திருப்பி விடப்படுகிறது. இதனால் எங்களுக்கு குறைந்த அளவு தண்ணீர் கிடைக்கிறது. சில நேரங்களில் தண்ணீர் வருவது இல்லை. எங்கள் பகுதிக்கு சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.

பணகுடி ம.தி.மு.க. நகர செயலாளர் சங்கர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “பணகுடி நகரப்பஞ்சாயத்தில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். 7 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து வார்டுகளுக்கும் டேங்கர் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.

Next Story