தேர்தல் தோல்வியை கண்டு துவள வேண்டாம்; தவறுகளை திருத்தி கொள்ள மக்கள் கொடுத்த வாய்ப்பாக கருத வேண்டும் - அமைச்சர் கே.சி.கருப்பணன் பேச்சு


தேர்தல் தோல்வியை கண்டு துவள வேண்டாம்; தவறுகளை திருத்தி கொள்ள மக்கள் கொடுத்த வாய்ப்பாக கருத வேண்டும் - அமைச்சர் கே.சி.கருப்பணன் பேச்சு
x
தினத்தந்தி 3 Jun 2019 11:15 PM GMT (Updated: 3 Jun 2019 9:33 PM GMT)

தேர்தல் தோல்வியை கண்டு துவண்டு விடாமல் தவறுகளை திருத்தி கொள்ள மக்கள் கொடுத்த வாய்ப்பாக இதை கருத வேண்டும் என தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.

அம்மாபேட்டை,

அம்மாபேட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட நெரிஞ்சிப்பேட்டையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தலில் நாம் தோல்வியடைந்ததை நினைத்து நிர்வாகிகள் யாரும் துவண்டு விடவேண்டாம். நம்முடைய தவறுகளை திருத்தி கொள்ள மக்கள் நமக்கு கொடுத்துள்ள வாய்ப்பாக கருதி வரவுள்ள உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கு நாம் எப்படி பணியாற்ற வேண்டும் என்பது குறித்து யோசிக்க வேண்டும்.

முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்திய, நல்ல திட்டங்களை எல்லாம் ஒவ்ெவாரு மக்களிடமும் முறையாக எடுத்து கொண்டு சேர்ப்பது நம் கடமையாக இருக்க வேண்டும். மேலும் தமிழக அரசு தற்போது ஏழைகளுக்காக செய்து வரும் நலத்திட்ட உதவிகளை ஒவ்வொரு தொண்டனும் நேரடியாக பொதுமக்களை சந்தித்து எடுத்து கூற வேண்டும். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகள் குறைந்ததற்கான காரணங்கள் குறித்து கண்டறிந்து அதற்கு ஏற்றார்போல் அ.தி.மு.க. நிர்வாகிகள் செயலாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் அம்மாபேட்டை ஒன்றிய அ.தி.மு.க. வி.எஸ்.சரவணபவா உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story