சீகூர் வனப்பகுதியில் மலைப்பாம்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு


சீகூர் வனப்பகுதியில் மலைப்பாம்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
x
தினத்தந்தி 3 Jun 2019 10:45 PM GMT (Updated: 3 Jun 2019 10:38 PM GMT)

சீகூர் வனப்பகுதியில் மலைப்பாம்புகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

மசினகுடி,

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மிகவும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் சீகூர் வனப்பகுதி முக்கியமானதாக கருதப்படுகிறது. மனிதர்கள் நடமாட்டம் இல்லாத இந்த வனப்பகுதியில் புலிகள், சிறுத்தைப்புலிகள், காட்டுயானைகள், கரடிகள், மான்கள், பாம்பு இனங்கள் என பல்வேறு வன உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. உணவு, தண்ணீர் போன்ற இன்றியமையாத தேவைகள் அங்கு கிடைப்பதால், வன உயிரினங்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே செல்கிறது. அவற்றை கண்காணிக்கும் பணியில் சீகூர் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வன உயிரினங்களுக்கு தேவையான மேம்பாட்டு பணிகளையும் செய்து வருகின்றனர். குறிப்பாக தடுப்பணைகளை கட்டுவது, நீர் நிலைகளை தூர்வாருவது, வேட்டை தடுப்பு முகாம்களை அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வனத்துறையினரின் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக அரிய வகையான பிணம் திண்ணி கழுகுகளும் நீலகிரியிலேயே இந்த வனப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதேபோல சீகூர் வனப்பகுதியில் ஏராளமான பாம்பு இனங்களும் இருப்பது தெரியவந்துள்ளது. நல்ல பாம்பு, கண்ணாடி விரியன், கட்டு பிரியன் உள்ளிட்ட கொடிய வி‌‌ஷம் கொண்ட பாம்புகளும், சாரை பாம்பு உள்ளிட்ட வி‌‌ஷம் இல்லாத பாம்புகளும் சுற்றித்திரிகின்றன.

குறிப்பாக அதிக நீளம் கொண்ட மலைப்பாம்புகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. 10 அடி முதல் 15 அடி நீளம் வரை உள்ள இந்த பாம்புகள் மான், முயல், பன்றி போன்ற வனவிலங்குகளை உயிருடன் விழுங்கும் தின்னும் திறன் கொண்டுள்ளன. முட்புதர்கள், புல்வெளிகள் மற்றும் நீர் நிலைகளின் அருகில் சத்தம் இன்றி படுத்து கிடக்கும் இந்த மலைப்பாம்புகள், தனது அருகில் வரும் இரையை கவ்வி பிடித்து விடுகின்றன. பின்னர் தனது உடலால் இரையை சுருட்டி மயங்க செய்து, விழுங்கிவிடுகின்றன.

சமீப காலங்களாக சீகூர் வனப்பகுதியில் அடிக்கடி மலைப்பாம்புகளை ரோந்து செல்லும் வனத்துறையினர் பார்த்து வருகின்றனர். இது மலைப்பாம்புகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதை காட்டுகிறது. கோடை காலம் என்பதால் பகல் நேர வெப்பத்தில் இருந்து தப்பிக்கவும், இரையை பிடிக்கவும் வசதியாக நீர் நிலைகளில் மலைப்பாம்புகள் படுத்துள்ளதை வனத்துறையினரால் காண முடிகிறது. மான் போன்ற வனவிலங்குகளை சில மலைப்பாம்புகள் பிடித்து விழுங்கிய பிறகு ஊர்ந்து செல்ல முடியாமல் படுத்து கிடப்பதையும் அவர்கள் கண்டு வருகின்றனர்.

இவ்வாறு இரையை விழுங்கி படுத்துள்ள மலைப்பாம்புகள் சுமார் 2 நாட்கள் வரை அதே இடத்தில் படுத்து இருக்கும். அவற்றுக்கு வனத்துறையினர் எந்த தொந்தரவும் அளிக்காமல் தொடர்ந்து கண்காணிப்பார்கள். தற்போது நடந்து முடிந்த வனவிலங்குகள் கணக்கெடுப்பின்போது, வனத்துறையினர் அசூரமட்டம் பகுதியில் மானை விழுங்கிய மலைப்பாம்பு ஒன்று படுத்து கிடந்ததை பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story