நெல்லை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வை 28 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள் முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் தகவல்


நெல்லை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வை 28 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள் முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் தகவல்
x
தினத்தந்தி 4 Jun 2019 10:30 PM GMT (Updated: 4 Jun 2019 9:19 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வை 28 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் தெரிவித்தார்.

நெல்லை,

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், ஆசிரியர் தகுதி தேர்வு வருகிற 8-ந் தேதி (சனிக்கிழமை) மற்றும் 9-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடக்கிறது. வருகிற 8-ந் தேதி ஆசிரியர் பட்டய படிப்பு முடித்தவர்களுக்கான முதலாவது தாள் தேர்வும், 9-ந் தேதி பட்டதாரி ஆசிரியர் படிப்பை முடித்தவர்களுக்கான இரண்டாவது தாள் தேர்வும் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், நெல்லை டவுன் சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) சுவாமிநாதன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் வருகிற 8-ந் தேதி நடைபெறும் ஆசிரியர் பட்டய படிப்பு முடித்தவர்களுக்கான முதலாவது தாள் தேர்வானது 22 மையங்களில் நடக்கிறது. இதில் 9 ஆயிரத்து 144 பேர் தேர்வு எழுதுகின்றனர். அதேபோன்று 9-ந் தேதி நடைபெறும் பட்டதாரி ஆசிரியர் படிப்பை முடித்தவர்களுக்கான இரண்டாவது தாள் தேர்வானது 45 மையங்களில் நடக்கிறது. இதில் 18 ஆயிரத்து 949 பேர் தேர்வு எழுதுகின்றனர். மொத்தம் 28 ஆயிரத்து 93 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

தேர்வு நடத்துதல் மற்றும் கண்காணிப்பு பணியில் 400-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். தேர்வில் எந்த பிரச்சினைகளும் ஏற்படாமல், சிறப்பான முறையில் தேர்வினை நடத்துவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறினார்.

இதற்கிடையே ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவோருக்கு, ஹால் டிக்கெட்டில் புள்ளி விவரங்கள், புகைப்படம் மாறி குளறுபடி ஏற்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் கூறுகையில், ஹால் டிக்கெட்டில் புகைப்படம் மாறி இருந்தால், அவர்கள் ஒரு வெள்ளை காகிதத்தில் தங்களது புகைப்படத்தை ஒட்டி, தகுதியான அரசு அதிகாரியிடம் சான்றொப்பம் பெற்று, அதனை தேர்வுக்கூடத்துக்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் சான்றொப்பம் பெறுவதற்கு ஒட்டப்பட்ட அதே புகைப்படம் ஒன்றும், ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலும் எடுத்து வர வேண்டும். அவர்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.

Next Story