மறைந்த போலீஸ் அதிகாரியின் வீட்டில் துப்பாக்கி, தோட்டாக்கள் திருடிய 3 பேர் கைது


மறைந்த போலீஸ் அதிகாரியின் வீட்டில் துப்பாக்கி, தோட்டாக்கள் திருடிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 4 Jun 2019 10:33 PM GMT (Updated: 4 Jun 2019 10:33 PM GMT)

மறைந்த போலீஸ் அதிகாரியின் வீட்டில் துப்பாக்கி, தோட்டாக்கள் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

மும்பை சயானில் உள்ள சிவ்னேரி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கிரிதிக்குமார்(வயது51). இவர் மறைந்த போலீஸ் உதவி கமிஷனர் காசினாத் கரன்ஜேவின் மகன் ஆவார். கடந்த சில நாட்களுக்கு முன் கிரிதிக்குமார் குடும்பத்துடன் வெளியே சென்று இருந்தார்.

அப்போது, வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் மறைந்த உதவி கமிஷனரின் உரிமம் பெற்ற துப்பாக்கி மற்றும் 42 தோட்டாக்கள், ரூ.1¾ லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்களை திருடிச்சென்றனர்.

3 பேர் கைது

இது குறித்து போலீஸ் அதிகாரியின் மகன் சயான் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவந்தனர். இந்தநிலையில் போலீசார், மறைந்த போலீஸ் அதிகாரியின் வீட்டில் கொள்ளையடித்த ஜெய பிரதீப் சந்தோஷ்(31), பாபு ஜமாலுதீன் கான்(35), கணேஷ் மாமா வைதியா(47) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

பின்னர் போலீசார் அவர்களிடம் இருந்து துப்பாக்கி, 42 தோட்டாக்கள் மற்றும் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான வெள்ளிப்பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஒரு கொள்ளையனை வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story