தாராபுரத்தில் ஆட்டோ டிரைவரை காதலித்த 2 பெண்கள்; ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டு வீட்டிற்கு அழைத்து சென்றார்


தாராபுரத்தில் ஆட்டோ டிரைவரை காதலித்த 2 பெண்கள்; ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டு வீட்டிற்கு அழைத்து சென்றார்
x
தினத்தந்தி 5 Jun 2019 12:15 AM GMT (Updated: 4 Jun 2019 11:00 PM GMT)

தாராபுரத்தில் ஒரு ஆட்டோ டிரைவரை 2 பெண்கள் காதலித்தனர். அவர்களுக்கு ஒரே நேரத்தில் தாலி கட்டி வீ்ட்டிற்கு அழைத்து சென்றார்.

தாராபுரம்,

தாராபுரம் புதுக்கோட்டைமேடு பகுதியை சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் கடந்த மாதம் 29-ந் முதல் தேதி காணாமல்போய்விட்டார். இது குறித்து அந்த பெண்ணின் தந்தை தாராபுரம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் அந்த பெண்ணை தேடிவந்தனர்.

இந்த நிலையில் காணாமல் போன அந்த இளம்பெண் தாராபுரம் பஸ் நிலையத்தில் ஒரு வாலிபருடன் நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணையும், அவருடன் இருந்த வாலிபரையும் மடக்கிப்பிடித்தனர். அப்போது அந்த வாலிபருடன் இருந்த மற்றோரு பெண் தன்னையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லுமாறு போலீசாரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். அதையடுத்து போலீசார் 3 பேரையும் அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர் தாராபுரம் புதுக்கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் என்றும், அவருக்கு வயது 26 என்றும் தெரியவந்தது. இவருடன் வந்த 2 பெண்களும் அதே பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.

விசாரணையில் திருமணம் ஆகாத ஆட்டோ டிரைவர், முதலில் அதே பகுதியை சேர்ந்த கணவரை பிரிந்து வாழ்ந்த 25 வயது பெண்ணுடன் பழகி வந்துள்ளார். அந்த பழக்கம் அவர்களுக்குள் காதலாக மாறியது. இந்த காதல் ஒரு புறம் இருக்க மறுபுறம் அதே பகுதியை சேர்ந்த 19 வயது மற்றொரு இளம் பெண்ணுடன் ஆட்டோ டிரைவர் பழகி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆட்டோ டிரைவரின் , உண்மை நிலை தெரிய வந்தது. அதன்பிறகு காதலிகளுக்கு மத்தியில், ஆட்டோ டிவைரை யார் திருமணம் செய்து கொள்வது என்கிற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினையில் ஆட்டோ டிரைவர் தனது காதலிகளை சாமர்த்தியமாக சமாளித்து வந்துள்ளார்.

ஒரு கால கட்டத்தில் ஆட்டோ டிரைவர் தனது காதலிகள் இருவரையும் ஏமாற்றி விட முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதை தெரிந்து கொண்ட 2 பெண்களும் ஒன்று சேர்ந்து ஒரே நேரத்தில் ஆ ட்டோ டிரைவரை திருமணம் செய்து கொண்டு, அவருடன் ஒன்றாக வாழ்க்கை நடத்துவது முடிவு செய்தனர்.

இந்த முடிவை இருவரும் சேர்ந்து ஆட்டோ டிரைவரிடம் தெரிவித்தபோது அவருக்கு பேரானந்தம் ஏற்பட்டது. கண்ணா.. 2 லட்டு திண்ண ஆசையா.. என்று யாரோ கேட்பது போல் அவருக்கு தோன்றியது. உடனே காதலிகளின் ஆசைக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். அதையடுத்து காதலர்கள் 3 பேரும் பெற்றோர்களுக்கு தெரியாமல் வீட்டைவிட்டு வெளியேறி பழனிக்கு சென்றனர்.

அங்குள்ள ஒரு கோவில் முன்பு ஒரே நேரத்தில் 2 காதலிகளையும் திருமணம் செய்து கொண்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கோவை செல்வதற்காக தாராபுரம் வந்தபோது பஸ்நிலையத்தில் காதலிகளுடன் பிடிப்பட்டது தெரியவந்தது. அதையடுத்து போலீசார் காதலர்களின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர். பேச்சுவார்த்தையில், 2 பெண்களும் காதல் கணவரான ஆட்டோ டிரைவரருடன் தான் சேர்ந்து வாழ்வோம் என்று பிடிவாதம் பிடித்தனர். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் காதலர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. போலீசார் வேறு வழியின்றி 2 பெண்களையும், காதல் கணவரான ஆட்டோ டிவைருடன் அனுப்பி வைத்தனர். அவர் தனது காதல் மனைவிகளை வீ்ட்டிற்கு அழைத்து சென்றார். . இந்த சம்பவம் அந்தபகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story