சாத்தூர் அருகே பஸ் கவிழ்ந்து 3 பேர் பலி; 58 பேர் படுகாயம்


சாத்தூர் அருகே பஸ் கவிழ்ந்து 3 பேர் பலி; 58 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 5 Jun 2019 12:00 AM GMT (Updated: 4 Jun 2019 11:40 PM GMT)

சாத்தூர் அருகே சாலையோர பள்ளத்தில் சுற்றுலா பஸ் கவிழ்ந்த விபத்தில் சிறுமி உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். 58 பேர் படுகாயம் அடைந்தனர்.

சாத்தூர்,

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கரிப்போடு தாலுகா கொடுவாயூர் கிராமத்தை சேர்ந்த 70 பேர் தமிழகத்திற்கு சுற்றுலா புறப்பட்டனர். அவர்கள் ஒரு பஸ்சில் கோபாலகிருஷ்ணன்(வயது 49), தேவயானி(45) ஆகியோர் தலைமையில் தமிழகத்திற்கு வந்தனர். பாலக்காட்டை சேர்ந்த நிஷாத்(25) என்பவர் பஸ்சை ஓட்டினார். அவர்கள் பல்வேறு பகுதிகளை சுற்றிபார்த்து விட்டு நேற்று முன்தினம் கன்னியாகுமரிக்கு சென்றனர். அங்குள்ள கோவில்களுக்கும், பத்மநாபபுரம் அரண்மனை உள்ளிட்ட இடங்களுக்கு சென்றுவிட்டு இரவில் பஸ்சில் அங்கிருந்து புறப்பட்டனர்.

இந்த பஸ் நேற்று அதிகாலை 3 மணி அளவில் கோவில்பட்டி-சாத்தூர் நெடுஞ்சாலையில் சாத்தூர் அருகே உள்ள பெத்துரெட்டியபட்டி பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரம் உள்ள பள்ளத்தில் இறங்கி தலைகுப்புற கவிழ்ந்தது.

பஸ்சில் இருந்த அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த நேரத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதால், பஸ்சுக்குள் ஒருவர் மீது ஒருவர் விழுந்தும், இடிபாடுகளில் சிக்கியும் அலறினர். ஆனால் அதிகாலை நேரம் என்பதால் அந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லை. சிறிது நேரம் கழித்துதான் அந்த வழியாக வந்தவர்கள் மூலம் போலீசாருக்கு விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து சாத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், சாத்தூர் துணை சூப்பிரண்டு ராம கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் மீட்பு பணிகளை முடுக்கிவிட்டனர். மேலும் சாத்தூர் தீயணைப்பு படையினரும் அங்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

கவிழ்ந்து கிடந்த பஸ்சுக்குள் ரத்தக்காயங்களுடன் கிடந்தவர்கள் ஒவ்வொருவராக மீட்கப்பட்டு வெளியே கொண்டு வரப்பட்டனர். பெரும்பாலானவர்கள் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து அதன் வழியே மீட்கப்பட்டனர்.

இந்த விபத்தில் சரோஜினி (65), பெட்டம்மாள் (75) என 2 பெண்களும், 8 வயது சிறுமி நிகிலாவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்ததால் அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மேலும் இந்த விபத்தில் தேவயானி, தேவி (60), லீலா (53), தங்காள் (56) மற்றும் குழந்தைகள் உள்பட 58 பேர் படுகாயம் அடைந்தனர். மற்றவர்கள் லேசான காயத்துடன் தப்பினர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சாத்தூர் மற்றும் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் நிஷாத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவில் இருந்து வந்த சுற்றுலா பஸ் கவிழ்ந்து 3 பேர் பலியானதும், 58 பேர் படுகாயம் அடைந்ததும் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story