தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி


தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 5 Jun 2019 10:30 PM GMT (Updated: 5 Jun 2019 6:33 PM GMT)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் நேற்று 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி,

ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5-ந் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சுற்றுச்சூழல் தினத்தை ஐக்கியநாடுகள் அமைப்பு காற்று மாசு என்ற தலைப்பில் கொண்டாடுகிறது. இதன் அடிப்படையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று சங்கரப்பேரியில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கருத்தப்பாண்டியன் தலைமை தாங்கி மரக்கன்று நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அந்த கிராமம் முழுவதும் சுமார் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த பணியில் 400 ஊழியர்கள் ஈடுபட்டனர்.

நிகழ்ச்சியில் ஸ்டெர்லைட் நிறுவன ஊழியர்களுக்கு மாதுளை, மா, சப்போட்டா, கூஸ்பெரி, எலுமிச்சை, கொய்யா மற்றும் சீத்தா உள்ளிட்ட 400 வகையான பழ மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. அதனை வீடுகளில் நட்டு சுற்றுச்சூழலை மேம்படுத்தி தூத்துக்குடியை பசுமை மாவட்டமாக மாற்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

மேலும் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் ரூ.100 கோடி மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக பசுமை தூத்துக்குடி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே 8 ஆயிரம் மரங்கள் நடப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஸ்டெர்லைட் நிறுவன தலைமை அதிகாரி சுமதி மற்றும் மூத்த அதிகாரிகள் சுப்பையா, கோவிந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story