நீட்’ தேர்வில் தோல்வியடைந்ததால் பட்டுக்கோட்டை மாணவி உள்பட 2 பேர் தற்கொலை


நீட்’ தேர்வில் தோல்வியடைந்ததால் பட்டுக்கோட்டை மாணவி உள்பட 2 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 5 Jun 2019 11:15 PM GMT (Updated: 5 Jun 2019 6:45 PM GMT)

‘நீட்’ தேர்வில் தோல்வியடைந்ததால் மன வேதனை அடைந்த பட்டுக்கோட்டை மாணவி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சீனிவாசன் நகரை சேர்ந்தவர் நம்பிராஜன் (வயது 44). மீன் வியாபாரி. இவருடைய மகள் வைசியா (17). இவர், பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்தார். டாக்டராக வேண்டும் என்ற கனவுடன் இருந்த வைசியா, மருத்துவ படிப்புகளுக்கான நுழைவு தேர்வான ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பித்து, தேர்வு எழுதுவதற்கு பல மாதங்களாக தீவிரமாக தயாராகி வந்தார்.

கடந்த மாதம் (மே) 5-ந் தேதி நடந்த ‘நீட்’ தேர்வில் வைசியா ஆர்வத்துடன் கலந்து கொண்டார். இந்த நிலையில் ‘நீட்’ தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் வைசியாவுக்கு குறைந்த மதிப்பெண்ணே கிடைத்தது. இதன் காரணமாக தன்னால், டாக்டருக்கு படிக்க முடியாதோ? என வைசியா கவலை அடைந்ததார்.

மன வேதனையில் இருந்த அவர், நேற்று மதியம் வீட்டில் இருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதில் தீ உடல் முழுவதும் பரவியதில் வைசியா வெப்பம் தாங்க முடியாமல் வேதனையில் அலறி துடித்தார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் ஓடிச்சென்று பார்த்தனர். அப்போது வைசியா உடல் கருகி ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக ஓடிச்சென்று அவர் உடல் மீது எரிந்த தீயை அணைத்து காப்பாற்றி சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வைசியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

கையில் ஸ்டெதஸ்கோப்பை பிடித்து டாக்டராக வேண்டிய தங்களது மகள் இப்படி கருகி விட்டாளே என்று தாயும், தந்தையும் மகளின் உடல் மீது விழுந்து கதறி அழுத காட்சி காண்போரின் கண்களை குளமாக்கியது. இதுகுறித்து பட்டுக்கோட்டை நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

‘நீட்’ தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மற்றொரு மாணவியும் தற்கொலை செய்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

தேனி மாவட்டம் தி.ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் தனது மனைவி ராஜலட்சுமி மற்றும் மகள் ரிதுஸ்ரீயுடன் திருப்பூர் வெள்ளியங்காடு முத்தையன்கோவில் வீதியில் தங்கி இருந்து பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மகள் ரிதுஸ்ரீ (18) கடந்த கல்வி ஆண்டில், ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில் பிளஸ்-2 படித்தார். அரசு பொதுத்தேர்வில் 490 மதிப்பெண்கள் பெற்ற அவர் நீட் தேர்வுக்காக விண்ணப்பித்திருந்தார். கடந்த மாதம் 5-ந் தேதி நீட் தேர்வு எழுதிய ரிதுஸ்ரீ, தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். இந்த நிலையில் வழக்கம் போல மாணவியின் பெற்றோர் நேற்று காலையில் வேலைக்காக சென்று விட்டனர்.

ரிதுஸ்ரீ மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தேர்வு முடிவுக்காக அவர் காத்திருந்ததாக தெரிகிறது. முடிவுகளை தெரிந்து கொள்ள அவரின் பெற்றோரும் ஆர்வமாக இருந்துள்ளனர்.

நீட் தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து மகள் தேர்வில் வெற்றி பெற்று விட்டாரா? என்பதை அறிய நேற்று மாலை 3.30 மணி அளவில் அவருடைய தந்தை செல்வராஜ், ரிதுஸ்ரீக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் அழைப்பை எடுக்கவில்லை. பல முறை தொடர்பு கொண்டும் அவர் அழைப்பை எடுக்காததை தொடர்ந்து, ரிதுஸ்ரீயின் பெற்றோர் வேலையை விட்டு விட்டு வீட்டிற்கு வந்து உள்ளனர்.

அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. உடனே அவர்கள் மகள் பெயரை சொல்லி கதவை தட்டி பார்த்து உள்ளனர். நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர்கள், கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு மாணவி ரிதுஸ்ரீ தனது தாயின் சேலையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் கதறி அழுதனர்.

இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன், தூக்கில் தொங்கி கொண்டிருந்த ரிதுஸ்ரீயை கீழே இறக்கியுள்ளனர். பின்னர் அவரை, வாகனம் மூலம் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தனது மகள் இறந்து கிடப்பதை பார்த்து அவருடைய பெற்றோர் கதறி அழுதது, அங்கு நின்று கொண்டிருந்தவர்களை கண்கலங்க வைத்தது.

இதுகுறித்த தகவல் திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். பின்னர் இந்த தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story