திருவாரூரில் இலவச தாய் சேய் நல வாகனங்கள் கலெக்டர் ஆனந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்


திருவாரூரில் இலவச தாய் சேய் நல வாகனங்கள் கலெக்டர் ஆனந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 5 Jun 2019 10:45 PM GMT (Updated: 5 Jun 2019 6:59 PM GMT)

திருவாரூரில் இலவச தாய் சேய் நல வாகனங்களை கலெக்டர் ஆனந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து தேசிய சுகாதார இயக்கம், தமிழ்நாடு சுகாதார திட்டம் மற்றும் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் இலவச தாய் சேய் நல வாகனங்கள் தொடக்க விழா நடந்தது. விழாவில் மாவட்ட கலெக்டர் ஆனந்த் கொடியசைத்து வாகனங்களை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ரூ.40 லட்சம் மதிப்பிலான 3 இலவச தாய் சேய் நல வாகனங்கள் பொதுமக்களின் சேவைக்காக வழங்கப்பட்டுள்ளது. இந்த சேவை மூலம் அரசு மருத்துவமனைகளில் பிரசவித்த தாய் மற்றும் குழந்தைகள் அவர்களது இல்லத்திற்கு அழைத்து செல்லபடுகிறார்கள். அதன் பின்னர் ஒரு ஆண்டிற்கு தடுப்பூசிக்காகவும் மருத்துவமனையில் இருந்து பாதுகாப்பாக அழைத்து செல்லபடுகிறார்கள். இந்த சேவைக்கு யாரும் சன்மானம் கொடுக்க தேவையில்லை. முற்றிலும் இலவச சேவையாகும்.

இந்த இலவச சேவையை மேம்படுத்தும் விதமாக ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சைக்காக வரும்பொழுது அவர்களது இல்லத்திற்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். மேலும் மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளை சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரவும் சிகிச்சைக்கு பின் அவர்களது இல்லத்திற்கு கொண்டு சேர்க்கும் சேவை இலவசமாக செய்யப்படுகிறது. இந்த சேவையை பெறுவதற்கு இலவச தொலைபேசி எண் 102 அழைத்து பயன்பெறலாம்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) பால்துரை, ரெட்கிராஸ் தலைவர் ராஜகுமார், செயலாளர் வரதராஜன், மக்கள் தொடர்பு அலுவலர் ரமேஷ், திட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story