அம்மன் கோவில் விழாக்களில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


அம்மன் கோவில் விழாக்களில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 5 Jun 2019 10:30 PM GMT (Updated: 5 Jun 2019 8:22 PM GMT)

விராச்சிலை, ராங்கியத்தில் உள்ள அம்மன் கோவில்களில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் படித்து இழுத்தனர்.

திருமயம்,

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே விராச்சிலையில் மது அடைக்கல காத்த அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து மண்டகப்படிதாரர்கள் சார்பில் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து காலை, மாலை இருவேளைகளிலும் அம்மன் பல்வேறு வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.

தேரோட்டம்

இதையடுத்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அடைக்கல காத்த அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், களபம், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேருக்கு எழுந்தருளினார். இதைதொடர்ந்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரை முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் இழுத்து வந்து கோவில் நிலையை வந்தடைந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

ராங்கியம்

திருமயம் அருகே உள்ள ராங்கியத்தில் பொன்னழகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் பொன்னழகி அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளினார். தேரை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் படித்து இழுத்தனர். தேரை பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக இழுத்து வந்து கோவில் நிலையை வந்தடைந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். 

Next Story