மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி இசைக்கலைஞர்கள் 2 பேர் பலி பழனி அருகே பரிதாபம்


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி இசைக்கலைஞர்கள் 2 பேர் பலி பழனி அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 5 Jun 2019 10:30 PM GMT (Updated: 5 Jun 2019 8:31 PM GMT)

பழனி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் இசைக்கலைஞர் கள் 2 பேர் பலியாகினர்.

நெய்க்காரப்பட்டி,

பழனி அருகே உள்ள மிடாப்பாடி கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் ஹரிதாஸ் (வயது 19). இவருடைய உறவினர் திருப்பூர் மாவட்டம் கடத்தூரை சேர்ந்த கிட்டான் மகன் தானக்குமார் (20). இவர்களுக்கு திருமணம் ஆகவில்லை. இவர்கள், கோவில் திருவிழா, திருமணம் ஆகிய நிகழ்ச்சிகளின் போது டிரம்ஸ், பேண்ட் செட் வாசித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு கடத்துக்குளம் பகுதியில் நடந்த ஒரு திருவிழா இசைநிகழ்ச்சியில் ஹரிதாஸ் மற்றும் தானக்குமார் ஆகியோர் பங்கேற்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

நள்ளிரவு 1 மணி அளவில் பழனி அருகே உள்ள தாளையம் பகுதியில் வந்தபோது, எதிரே பொள்ளாச்சியை சேர்ந்த விஜயராஜ் என்பவர் ஓட்டி வந்த கார் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது நேருக்குநேர் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சாமிநாதபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் பலியான ஹரிதாஸ், தானக்குமார் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சாமிநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story