குடும்பத்தகராறில் விபரீதம் கணவன்-மனைவி தீக்குளித்து தற்கொலை


குடும்பத்தகராறில் விபரீதம் கணவன்-மனைவி தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 5 Jun 2019 8:53 PM GMT (Updated: 5 Jun 2019 8:53 PM GMT)

கோடம்பாக்கத்தில் குடும்பத்தகராறில் கணவன்-மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை,

சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜன்புரம் பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 75). ஓய்வுபெற்ற தபால் ஊழியர். இவரது மனைவி அமுதா (68). இவர்களது மகன் மலேசியாவில் வேலை செய்து வருகிறார். மகள் வண்ணாரப்பேட்டையில் வசித்து வருகிறார்.

வடிவேலு மனைவியுடன் கடந்த 6 மாதங்களாக கோடம்பாக்கத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வடிவேலுக்கும், அமுதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

தற்கொலை

ஒரு கட்டத்தில் வாக்கு வாதம் முற்றிய நிலையில், அமுதா தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதைக்கண்ட வடிவேலுவும், தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டார். இருவரும் போட்டிப்போட்டு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றனர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோடம்பாக்கம் போலீசார் 2 பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.

காரணம் என்ன?

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட போது கணவன்-மனைவி இருவரும் மதுபோதையில் இருந்ததாகவும், முதலில் வடிவேலு அமுதாவின் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்து விட்டு, பிறகு தனது உடலில் தீ வைத்துக்கொண்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

பொதுமக்கள் கூறும் தகவல் உண்மையா? அல்லது வேறு எதுவும் காரணமா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வயதான தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story