திருமங்கலம் அருகே குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை; 2 பேரின் உடல்களும் மீட்பு


திருமங்கலம் அருகே குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை; 2 பேரின் உடல்களும் மீட்பு
x
தினத்தந்தி 5 Jun 2019 10:45 PM GMT (Updated: 5 Jun 2019 10:06 PM GMT)

திருமங்கலம் அருகே பெற்ற குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமங்கலம்,

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கிழவனேரி கிராமத்தை சேர்ந்தவர் அழகுபாண்டி (வயது 37), எலக்ட்ரீசியன். இவருக்கும் தேனி மாவட்டத்தை சேர்ந்த மகேஸ்வரி (34) என்பவருக்கும் கடந்த 2013–ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு நவீன்பாண்டி (3) என்ற குழந்தை இருந்தது.

நேற்று மகேஸ்வரி தனது குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே சென்றார். வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அழகுபாண்டி மற்றும் அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் தாயையும், குழந்தையையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தநிலையில் நேற்றிரவு அந்த பகுதியில் உள்ள ஒரு தோட்டத்து கிணற்றில் பெண், ஒரு குழந்தையுடன் இறந்துகிடப்பதாக திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் மற்றும் திருமங்கலம் தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் கிணற்றில் பிணமாக கிடந்த பெண் மற்றும் குழந்தையின் உடல்களை கிணற்றில் இருந்து மீட்டனர். அப்போது இறந்து கிடந்த பெண் மகேஸ்வரி என்பதும், அவர் தனது மகன் நவீன்பாண்டியுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. பின்னர் தாய், குழந்தை உடல்களை பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பிவைத்தனர்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையுடன் மகேஸ்வரி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிழவனேரி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story