திருவண்ணாமலை, ஆரணி நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் கலெக்டர் தகவல்


திருவண்ணாமலை, ஆரணி நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 7 Jun 2019 10:15 PM GMT (Updated: 7 Jun 2019 5:21 PM GMT)

திருவண்ணாமலை, ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தேர்தல் செலவு கணக்கை வருகிற 17-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கந்தசாமி தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை,

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 25 வேட்பாளர்களும், ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 15 வேட்பாளர்களும் போட்டியிட்டனர். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சம் ரூ.70 லட்சம் வரை பிரசாரத்துக்கு செலவழிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

திருவண்ணாமலை, ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பிரசார காலத்திலேயே 3 முறை செலவு கணக்கு தாக்கல் செய்து உள்ளனர். இறுதி கணக்குகளை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் அவகாசம் வழங்கி உள்ளது.

தேர்தல் முடிவு வெளியான 25 நாட்களுக்குள் அதாவது வருகிற 17-ந் தேதிக்குள் செலவு கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். இதனை ஆய்வு செய்ய 17-ந் தேதி தேர்தல் ஆணைய செலவின பார்வையாளர்கள் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகைபுரிய உள்ளனர்.

தேர்தல் ஆணையம் பராமரிக்கும் நிழல் பதிவேட்டில் இருக்கும் செலவு கணக்கையும், வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் தணிக்கை செய்த செலவு கணக்கையும் ஒப்பிட்டு ஆய்வு செய்வார்கள்.

17-ந் தேதி ஆஜராகாத வேட்பாளர்கள் வருகிற 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரையில் வேட்பாளர் செலவீனம் குறித்த இறுதி அறிக்கையை ஒப்படைக்க கேட்டு கொள்ளப்படுகிறது. கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் சம்பந்தப்பட்ட வேட்பாளர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story