பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளான குடிநீர், சாலை வசதி பிரச்சினைகளை அதிகாரிகள் உடனடியாக தீர்க்க வேண்டும் - அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் உத்தரவு


பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளான குடிநீர், சாலை வசதி பிரச்சினைகளை அதிகாரிகள் உடனடியாக தீர்க்க வேண்டும் - அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் உத்தரவு
x
தினத்தந்தி 7 Jun 2019 10:45 PM GMT (Updated: 7 Jun 2019 10:28 PM GMT)

பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளான குடிநீர், சாலை வசதி பிரச்சினைகளை அதிகாரிகள் உடனடியாக தீர்க்க வேண்டும் என்று அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து துறை வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் சு.குணசேகரன்(தெற்கு), கரைப்புதூர் நடராஜன்(பல்லடம்), விஜயகுமார்(வடக்கு), தனியரசு(காங்கேயம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசும்போது கூறியதாவது:-

தமிழக அரசு மக்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக சிறப்பான முறையில் திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது. நமது மாவட்டத்தில் உள்ள அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை வசதி, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளையும் உடனடியாக தீர்க்க வேண்டும்.

தமிழக அரசின் அனைத்து வளர்ச்சி திட்ட பணிகளும் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு திருப்பூரை முன்னோடி மாவட்டமாக திகழ கடுமையாக உழைக்க வேண்டும்.

மேலும், திருப்பூர் மாநகராட்சி, 5 நகராட்சிகள், 16 பேரூராட்சிகள் மற்றும் 13 ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீர் திட்டப்பணிகளும், இந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மற்றும் மேற்கொள்ளப்பட உள்ள வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்தும் அதிகாரிகள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். அனைத்துத்துறை அதிகாரிகளும் பொதுமக்களின் அனைத்து அடிப்படை தேவைகளையும் உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக திருப்பூர் வடக்கு, தெற்கு, பல்லடம், காங்கேயம் உள்ளிட்ட தொகுதிகள் வாரியாக நடந்த,, நடைபெற உள்ள வளர்ச்சி பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.க்கள் கேட்டறிந்தனர். அப்போது பல்லடம் தொகுதியில் வேளாண்துறைக்காக புதிதாக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரி பேசிக்கொண்டு இருக்கும் போது, இடையே திடீரென பேசிய பல்லடம் தொகுதி எம்.எல்.ஏ. கரை புதூர் நடராஜன், நீங்கள் தன்னிச்சையாக அரசின் திட்டங்களை எவ்வாறு நிறைவேற்றுவீர்கள்?.

மக்கள் பிரதிநிதிகளான எங்களுக்கு எந்த தகவல்களும் தராமல் கட்டிட பணிகளுக்கு பூமிபூஜை போட்டு, அவற்றை கட்டிமுடித்து திறப்பு விழாவிற்கும் தயாராகி விட்டீர்கள். தொகுதி எம்.எல்.ஏ.க்களுக்கு தெரியாமல் அதிகாரிகள் தன்னிச்சையாக நடந்து கொள்ள வேண்டாம். இது மக்கள் மத்தியில் அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் என கடிந்து கொண்டார்.

இதுபோல திருப்பூர் வடக்கு, தெற்கு, காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ.க்களும், அவர்கள் தொகுதி குறித்த ஆய்வின் போது அதிகாரிகள் சரியான முறையில் அரசின் திட்டங்களை நிறைவேற்றுங்கள் என்றும், இல்லையென்றால் அரசு மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர். மேலும், ஆய்வு கூட்டத்திற்கு வராத முக்கிய அதிகாரிகள் குறித்து கேட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி, இதுகுறித்து உடனடியாக விளக்கம் அளிக்கவும் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

கூட்டத்தில், திருப்பூர் மாவட்ட ஆவின் சங்க தலைவர் மனோகரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி, மாநகர போலீஸ் துணை கமிஷனர் உமா, மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ரமேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார், துணை கலெக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story