ஓசூர் பகுதியில் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது


ஓசூர் பகுதியில் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 8 Jun 2019 10:30 PM GMT (Updated: 8 Jun 2019 6:56 PM GMT)

ஓசூர் பகுதியில் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஓசூர்,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி உத்தரவின் பேரில், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் மற்றும் போலீசார் பஸ் நிலையம் அருகில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் 2 பேர் மோட்டார் சைக்கிளில் சென்றனர். போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அவர்கள் 2 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்கள்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், 2 நபர்களையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று துருவி, துருவி விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சேலம் சீலநாயக்கன்பட்டி சண்முகா நகர் கோவிந்தராஜ் (வயது 26), பெங்களூரு கனகபுரா மெயின் ரோடு பகுதியை சேர்ந்த அந்தோணி என்கிற லாரன்ஸ் (27) என தெரிய வந்தது.

மேலும் அவர்கள் ஓசூரில் ரெயில் நிலையம் அருகில் பெண் ஒருவரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகையை பறித்து சென்றது தெரிய வந்தது. இவர்கள் ஓசூர் பகுதியில் பல்வேறு இடங்களில் நகை பறிப்பு, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 பவுன் தாலி சங்கிலி, பதிவு எண் இல்லாத மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story