சேலம் அருகே, 8 வழிச்சாலைக்கு எதிராக மண்பானைகளை கைகளில் ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


சேலம் அருகே, 8 வழிச்சாலைக்கு எதிராக மண்பானைகளை கைகளில் ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Jun 2019 11:00 PM GMT (Updated: 8 Jun 2019 7:00 PM GMT)

சேலம் அருகே 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக மண்பானைகளை கைகளில் ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அயோத்தியாப்பட்டணம்,

சேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலை திட்டம் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. இந்த திட்டத்திற்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது.

இதனிடையே இந்த தடைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணையின் போது, 8 வழிச்சாலைக்கு எதிராக ஐகோர்ட்டு விதித்த தடையை விலக்கிட உத்தரவிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது.

இதனிடையே சேலத்தில் நடந்த மேம்பாலம் திறப்பு விழாவில் பேசிய தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்களிடம் பேசி அவர்களுடைய அனுமதியை பெற்று 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என்று குறிப்பிட்டார்.

முதல்-அமைச்சரின் இந்த பேச்சை கண்டித்து, சேலம் அருகே குப்பனூர் கீரிக்காட்டில் உள்ள விவசாயி கந்தசாமி என்பவரின் பாக்கு தோட்டத்தில் 8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள் கைகளில் காலி மண்பானைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அப்போது ஒரு சில விவசாயிகள் கைகளில் மண்ணை அள்ளிக்கொண்டு ‘விட மாட்டோம், விடமாட்டோம் எங்கள் மண்ணை விடமாட்டோம், முறியடிப்போம், முறியடிப்போம், எங்களது நிலம், எங்கள் உரிமை’ என்று கோஷங்களை எழுப்பினர்.

இந்த போராட்டம் குறித்து விவசாயிகள் கூறும் போது,‘முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 8 வழிச்சாலைக்கு 98 சதவீதம் மக்கள் ஆதரவு தருகிறார்கள் என்று கூறினார். தற்போது விவசாயிகளை சமாதானப்படுத்துவோம் என்கிறார். அவர் சொல்வதெல்லாம் பொய். ஒரு சதவீதம் கூட விவசாயிகள் இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. நாங்கள் எங்கள் விளைநிலத்தை விட்டு எங்கே போவோம்?. ஒரு பிடி மண்ணை கூட விட்டு தர மாட்டோம். எங்கள் உயிர் இருக்கும் வரை போராடுவோம்’ என்றார்கள்.

Next Story