கீழத்தஞ்சாவூர்-பெரியகண்ணமங்கலம் இடையே குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


கீழத்தஞ்சாவூர்-பெரியகண்ணமங்கலம் இடையே குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 8 Jun 2019 10:30 PM GMT (Updated: 8 Jun 2019 7:13 PM GMT)

கீழத்தஞ்சாவூர்-பெரிய கண்ணமங்கலம் இடையே குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

திருமருகல்,

திருமருகல் ஒன்றியம் கீழத்தஞ்சாவூர் - பெரியகண்ணமங்கலம் இடையே வளப்பாற்றின் இடதுகரையில் தார்சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து நீண்ட காலமாக குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளும், பணிக்கு செல்லும் அரசு ஊழியர்கள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் இந்த சாலையில் சென்று வர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த தார்சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு, மண் சாலையாக மாறியுள்ளது. இப்பகுதியில் பஸ் வசதியில்லாத காரணத்தால் அப்பகுதி மக்கள் மோட்டார் சைக்கிள், சைக்கிளில் தான் சென்று வர வேண்டிய அவலநிலை உள்ளது. இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்வோர் சாலையில் பெயர்ந்து கிடக்கும் ஜல்லி கற்களால் நிலைதடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். மேலும் அருகில் உள்ள ஆற்றில் விழும் அபாய நிலை உள்ளது.

தடுப்பு சுவர்

சாலையோரத்தின் அருகில் உள்ள ஆற்றின் கரை உடைந்து சேதமாகி உள்ளதால் வெள்ள காலங்களில் தண்ணீர் இச்சாலை வழியே ஊருக்குள் புகும் நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட துறையினரிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என அந்த பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைத்தும், சாலையோரம் ஆற்றின் கரையில் தடுப்பு சுவர் அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Next Story