லாலாபேட்டை பகவதி அம்மன் கோவிலில் வைகாசி தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு


லாலாபேட்டை பகவதி அம்மன் கோவிலில் வைகாசி தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 8 Jun 2019 10:30 PM GMT (Updated: 8 Jun 2019 9:07 PM GMT)

லாலாபேட்டை பகவதி அம்மன் கோவிலில் வைகாசி தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

லாலாபேட்டை,

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், லாலாபேட்டை கொடிக்கால் தெருவில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்தாண்டும் திருவிழா கடந்த 7-ந்தேதி லாலாபேட்டை காவிரி ஆற்றில் கரகம் பாலித்து வீதி உலா வரும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து காவிரி ஆற்றில் எடுத்து வரப்பட்ட தீர்த்தம், பால்குடம் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வைகாசி தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி முதலில் அலங்கரிக்கப்பட்ட தேரில் பகவதி அம்மனை எழுந்தருள செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது. தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. அப்போது ஒவ்வொரு வீதியிலும் கூடிநின்ற பக்தர்கள், அம்மனுக்கு தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

தொடர்ந்து கோவில் முன்பு பக்தர்கள் பொங்கல் வைத்தல், அக்னி சட்டி எடுத்து வருதல், மாவிளக்கு எடுத்தல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் லாலாபேட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

குளித்தலையில் உள்ள நீலமேகபெருமாள் கோவிலில் வைகாசி திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோவிலில் விசேஷ பூஜைகள் செய்யப்பட்டு, கோவிலின் முன்பு உள்ள கொடிமரத்தில் கருடகொடி ஏற்றப்பட்டது. திருவிழாவையொட்டி நாளை கருடசேவையும், 13-ந்தேதி திருக்கல்யாண உற்சவமும், 15-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து 18-ந்தேதி வரை பகலில் பல்லக்கிலும், இரவில் ஹம்ச, ஹனுமந்த, விசேஷ, யானை, குதிரை ஆகிய வாகனங்களில் உற்சவ மூர்த்திகளின் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு பெருமாள் புறப்பாடு முடிந்தபிறகு கண்ணாடி அறையில் எம்பெருமானுக்கு விசேஷ ஆராதனை நடை பெறுகிறது.

Next Story