ஈரோடு -சென்னிமலை ரோட்டில் காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்


ஈரோடு -சென்னிமலை ரோட்டில் காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 8 Jun 2019 10:45 PM GMT (Updated: 8 Jun 2019 10:06 PM GMT)

சீராக குடிநீர் வினியோகிக்கக்கோரி ஈரோடு - சென்னிமலை ரோட்டில் காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு,

ஈரோடு மாநகராட்சி 37-வது வார்டுக்கு உள்பட்ட விவேகானந்தா நகரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு சூரம்பட்டி மண்டலம் சார்பில் காவிரி ஆற்று நீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறி அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் ஈரோடு -சென்னிமலை ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சூரம்பட்டி போலீசார், மாநகராட்சி அதிகாரிகள், கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-

எங்கள் பகுதிக்கு 4 நாட்கள் அல்லது 5 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதுவும் ஒரு மணி நேரம் மட்டுமே வருகிறது. இதனால் எங்களுடைய தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாமல் மிகவும் சிரமப்படுகிறோம்.

இதன் காரணமான பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.

எனவே எங்கள் பகுதிக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ெதருவிளக்கு, சாக்கடை கால்வாய் வசதியும் செய்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

அதற்கு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. கூறும்போது, உங்கள் பகுதிக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஊராட்சிக்கோட்டை குடிநீர் வினியோகம் ெதாடங்கினால் 24 மணி நேரமும் உங்களுக்கு தண்ணீர் கிடைக்கும். மேலும் உங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளும் உடனடியாக செய்து கொடுக்கப்படும் என்றனர்.

இதை ஏற்றுக்கொண்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் ஈரோடு -சென்னிமலை ரோட்டில் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story