ஆசிரியர் தகுதித்தேர்வை 17 ஆயிரம் பேர் எழுதினர்


ஆசிரியர் தகுதித்தேர்வை 17 ஆயிரம் பேர் எழுதினர்
x
தினத்தந்தி 9 Jun 2019 11:00 PM GMT (Updated: 9 Jun 2019 3:44 PM GMT)

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு 2-ம் தாளை 17 ஆயிரத்து 239 பேர் எழுதினர்.

திருவண்ணாமலை,

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு 1-ம் தாள் தேர்வு நேற்று முன்தினம் நடந்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 7 ஆயிரத்து 771 பேர் தேர்வு எழுதினர். நேற்று தாள் 2-க்கான தேர்வு நடந்தது. இதற்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் 42 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்வுப் பணிக்கு வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், வழித்தட அலுவலர்கள், முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் மற்றும் அறை கண்காணிப்பாளர்கள் என 1,280 அலுவலர்கள் ஈடுபட்டனர்.

இந்த தேர்விற்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 ஆயிரத்து 577 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 290 மாற்றுத்திறனாளிகள் அடங்குவர். மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் சலுகை வழங்கப்பட்டது.

அனைத்து தேர்வு மையங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த தேர்வை 17 ஆயிரத்து 239 பேர் எழுதினர். 1,338 பேர் தேர்வு எழுத வரவில்லை.

திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார், பள்ளி தலைமை ஆசிரியை ஜோதிலட்சுமி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story