‘அ.தி.மு.க.வில் எந்த குழப்பமும் இல்லை’ அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சொல்கிறார்


‘அ.தி.மு.க.வில் எந்த குழப்பமும் இல்லை’ அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சொல்கிறார்
x
தினத்தந்தி 9 Jun 2019 11:00 PM GMT (Updated: 9 Jun 2019 8:01 PM GMT)

‘அ.தி.மு.க.வில் எந்த குழப்பமும் இல்லை‘ என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

திண்டுக்கல்,

தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், திண்டுக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. மற்றும் ஆட்சி ஆகியவை முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோர் தலைமையில் சிறப்பாக நடைபெறுகிறது. எந்த விதமான குழப்பமும் இல்லை. கட்சியில் ஒரு விஷயத்தை பேச வேண்டும் என்றால், அது கணவன்-மனைவி உறவை போன்றது. எங்கு பேச வேண்டுமோ? அங்கு தான் அமர்ந்து பேச வேண்டும்.

நாங்கள் முழு மனதோடும், ஆர்வத்தோடும் பணியாற்றி கொண்டு இருக்கிறோம். கட்சி, மக்களுக்கான ஆட்சி என்று நாங்கள் சிறப்பாக பணியாற்றுகிறோம். நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் கட்சியை பலப்படுத்துவது, மக்களுக்கு தொடர்ந்து எவ்வாறு பணி செய்வது? என்று ஆலோசித்து அதன்படி செய்து கொண்டிருக்கிறோம்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு தீர்ப்பையும், சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கு ஒரு தீர்ப்பையும் மக்கள் அளித்துள்ளனர். தமிழ்நாட்டை நாங்கள் ஆள வேண்டும் என்பதற்காக 9 சட்டமன்ற தொகுதிகளில் எங்களுக்கு வெற்றியை அளித்துள்ளனர். இது தான் மக்களின் தீர்ப்பு. இது, எங்களுக்கு நல்ல படிப்பினையை கொடுத்துள்ளது.

மேலும் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோர் நல்ல பணிகளை செய்து மக்களின் மனதில் இடம்பிடித்துள்ளனர். அதேபோல் கட்சியையும் நல்ல முறையில் வழிநடத்தி செல்கிறார்கள். அமைச்சர்கள் உள்பட நாங்கள் அனைவரும், அவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.

பொய்யான வாக்குறுதிகளை கூறி, மக்களை திசைதிருப்பி ஏமாற்றி தி.மு.க.வும், காங்கிரசும் வாக்குகளை பெற்றன. நகை கடன் தள்ளுபடி, நீட்தேர்வு ரத்து, கல்வி கடன் ரத்து, விவசாய கடன் ரத்து, ரூ.72 ஆயிரம் உதவித்தொகை எனக்கூறி ஏமாற்றி பொய்யான வெற்றியை பெற்றனர். அது உண்மையான வெற்றி அல்ல.

தமிழ்நாடு உள்பட ஒருசில மாநிலங்களை தவிர இந்தியா முழுவதும் நரேந்திரமோடியை மக்கள் தேர்வு செய்துள்ளனர். இங்கு பொய்க்கு ஓட்டு விழுந்துள்ளது. விரைவில் அந்த மாயை விலகி விடும். மாற்றங்கள் வரும். உள்ளாட்சி தேர்தலில் மக்களை சந்தித்து நல்ல தீர்ப்பை பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story