சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது அ.தி.மு.க. அரசு தானாக கவிழும் பி.பழனியப்பன் பேட்டி


சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது அ.தி.மு.க. அரசு தானாக கவிழும் பி.பழனியப்பன் பேட்டி
x
தினத்தந்தி 9 Jun 2019 11:00 PM GMT (Updated: 9 Jun 2019 9:10 PM GMT)

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது அ.தி.மு.க. அரசு தானாக கவிழும் என்று முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் கூறினார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட அ.ம.மு.க. செயல் வீரர்கள் ஆலோசனைக்கூட்டம் தர்மபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் டி.கே.ராஜேந்திரன் வரவேற்று பேசினார். மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் ஆர்.ஆர்.முருகன் முன்னிலை வகித்தார்.

இதில் கட்சியின் தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் கலந்து கொண்டு தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார்.

இந்த கூட்டத்தில், மாவட்டத்தில் அனைத்து பகுதி களிலும் குடிநீர் இன்றி பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு சீரான குடிநீர் வழங்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். தர்மபுரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் பணியினை விரைவு படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தகவல் தொழில் நுட்ப பிரிவு மாநில தலைவர் பாலு, பேரவை மாவட்ட செயலாளர் தென்னரசு, எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் சம்பத், வக்கீல் அணி மாவட்ட செயலாளர் அசோகன், ஒன்றிய செயலாளர்கள் குப்புசாமி, கவுதமன், பாஸ்கர், பெரியசாமி, சாம்ராஜ், கணேசன், கருணாகரன் உள்பட கட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் தர்மபுரி நகர செயலாளர் மணிவண்ணன் நன்றி கூறினார்.

கூட்டத்திற்கு பின்னர் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் நிருபர்களிடம் கூறுகையில், அ.தி.மு.க.விற்கு அதிகாரமிக்க ஒற்றை தலைமை வேண்டும் என்று 18 எம்.எல்.ஏ.க்கள் முதலில் குரல் கொடுத்தோம். எங்களை அவர்கள் கட்சியை விட்டு நீக்கி விட்டனர். தற்போது ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஒற்றை தலைமை வேண்டும் என்று கூறி உள்ளார்.

இதே கருத்தை மேலும் பல எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி வருகின்றனர். அ.தி.மு.க.விற்கு டி.டி.வி. தினகரன் தான் விரைவில் தலைமை ஏற்பார். அவர் முதல்-அமைச்சராகவும் வருவார். சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாத தீர்மானத்தின்போது அ.தி.மு.க. அரசு தானாக கவிழும். இந்த அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை போய்விட்டது. ஒவ்வொரு நாளும் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் என்ன நடக்குமோ? என்று பயந்து கொண்டு இருக்கின்றனர், என்றார்.

Next Story