8 வழிச்சாலை திட்டத்தால் நிலம் பறிபோகும் வேதனையில் மூதாட்டி சாவு?


8 வழிச்சாலை திட்டத்தால் நிலம் பறிபோகும் வேதனையில் மூதாட்டி சாவு?
x
தினத்தந்தி 10 Jun 2019 10:30 PM GMT (Updated: 10 Jun 2019 7:22 PM GMT)

சேலம் அருகே 8 வழிச்சாலை திட்டத்தால் நிலம் பறிபோகும் வேதனையில் மூதாட்டி ஒருவர் இறந்து விட்டதாக உறவினர்கள் புகார் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பனமரத்துப்பட்டி, 

சேலம் மாவட்டம், மல்லூர் அருகே உள்ள நாழிக்கல்பட்டி கிராமம் தெற்கத்திகாடு பகுதியை சேர்ந்தவர் சேவிமாணிக்கம், விவசாயி. இவருக்கு இந்த பகுதியில் சுமார் 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.இதில் சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்காக சுமார் ஒரு ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த 8 வழிச்சாலை திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல், சேவிமாணிக்கத்தின் மனைவி பெத்தம்மாள் (வயது 70). மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். மேலும் இத்திட்டத்திற்கு ஐகோர்ட்டு தடை விதித்தும், மத்திய-மாநில அரசுகள் தொடர்ந்து இந்த சாலையை போட முயற்சிப்பது அவரிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விரக்தியில் இருந்த பெத்தம்மாள் நேற்றுமுன்தினம் இரவு திடீரென உயிரிழந்தார். இது அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 8 வழிச்சாலை திட்டத்தால் நிலம் கையகப்படுத்தப்படும் என்ற வேதனையில் மூதாட்டி பெத்தம்மாள் இறந்து விட்டதாக அவருடைய உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story